மேய்ப்பனும், கூலியாளும் (Shephered and hired hand).

நானே நல்ல மேய்ப்பன்,      நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோவான் 10:11).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/6fjGGS4zojo

இயேசு தன்னை நல்ல மேய்ப்பனாகவும்,      ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுக்கிறவராகவும் ஒப்பிட்டுக் கூறிய உவமையை யோவான் 10வது அதிகாரத்தில் வாசிக்கமுடிகிறது.   கிறிஸ்துவின் சரீரமாகிய சபை பக்தி விருத்தி அடைவதற்கு ஐந்து வகையான ஊழியங்களைக் கர்த்தர் நியமித்தார். அதில் ஒன்று மேய்ப்பனுடைய ஊழியமாய் காணப்படுகிறது. இந்நாட்களில் கர்த்தருடைய கண்கள் சபைத் தலைவர்களையும் ஊழியத் தலைவர்களையும் அல்ல,      நல்ல மேய்ப்பர்களைத் தேடுகிறது. நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுப்பான்,      தொழுவத்திற்குள் வாசல் வழியாய் பிரவேசிப்பான்,      ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவான்,      ஆடுகளுக்கு முன்பாக நடந்து போவான்,      எப்போதும் மந்தையோடு இருப்பதை விரும்புவான்,      ஆடுகளை தன் சொந்தப் பிள்ளைகளைப்  போலக் கருதுவான்,      கிறிஸ்து அவர்களில் உருவாகி வளரக் கர்ப்ப வேதனைப்படுவான். மந்தையைக் கர்த்தருடைய மகிமையான வருகைக்கு ஆயத்தப்படுத்துவான். தொழுவத்திலில்லாத,      சபைக்குள்ளில்லாத வேறு ஆடுகளைக் குறித்த கரிசனையுள்ளவனாயிருப்பான்,      அவர்களையும் மந்தைக்குள் கொண்டு வரப் பிரயாசப்படுவான்.  

மேய்ப்பர்களாய் அழைக்கப்பட்டவர்களில் அனேகர் இந்நாட்களில் கூலியாட்களைப் போல மாறிவிட்டார்கள். மந்தையைக் குறித்த கவலையில்லாதவர்களாய் காணப்படுகிறார்கள். கூலியைக் குறித்தும்,      ஆதாயத்தைக் குறித்தும் கவனமாயிருப்பார்களே ஒழிய மந்தையைக் குறித்துக் கவலைப்படுவதில்லை. தொழுவத்தில் ஆடுகளைச்  சேர்ப்பதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அந்நாட்களில்  வனாந்தரத்தில் காணப்படுகிற ஆடுகளுக்கு ஓநாய்கள்  ஆபத்தானதாய்  காணப்பட்டது. ஆகையால் ஓநாய்கள் ஆடுகளை பட்சிக்க வந்தவுடன்,      ஆடுகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக,      அவைகளை விட்டு கூலியாள் ஓடிப்போவான்.  ஆகையால் மந்தை சிதறடிக்கப்பட்டதாகவும் பீறப்பட்டதாகவும் போய்விடுகிறது. இந்நாட்களில் பிசாசு ஓநாயைப் போல மந்தையின் ஆடுகளை பட்சிக்க வகைதேடுகிறான். அவனுடைய பெயர்களில் ஒன்று சிதறடிக்கிறவன் என்பது. தாவீது தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது ஒருவிசை ஒரு சிங்கமும்,      ஒருவிசை ஒரு கரடியும் வந்து,      மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்தது,      அவன் அதைத் தொடர்ந்துபோய்,      அதை அடித்து,      ஆட்டை அதின் வாய்க்குத்  தப்புவித்தான். தாவீதைப் போல இந்நாட்களில் மேய்ப்பர்கள் மந்தையின் மேல் கவனமாயிருக்கிறவர்களாய் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

கர்த்தருடைய பிள்ளைகளே,      உங்கள் மேய்ப்பனுடைய சத்தத்தை அறிந்து கொள்ளுங்கள். உங்களை நடத்துகிறவர்கள் உங்கள் ஆத்துமாக்களுக்கு  உத்தரவாதம் பண்ணுகிறவர்கள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். கூலியாட்களின் சத்தம் கவர்ச்சியாகவும் இன்பமாகவும் இருக்கும்,      ஆனால் அவற்றிற்குப் பின்னால் உங்கள் ஆத்துமாக்களுக்குக்   கண்ணிகள் காணப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *