உபசரிப்பு (Hospitality).

1 பேது 4:8,9 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/1YIFBUL_-0M

மற்றவர்களை உபசரிக்க வேண்டும் என்ற குணாதிசயம் நம் ஒவ்வொருவருக்கும் காணப்பட வேண்டும். எபி 13:2 கூறுகிறது, அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு என்பதாக. அநேக வேளைகளில் தூரத்திலிருந்து வரும் தாய் தகப்பனை அன்போடு உபசரிக்கிறோம்; ஆனால், அந்நியர்களை உபசரிக்க நாம் தவறிவிடுகிறோம். சில வீடுகளில் தாய் தகப்பன், தன்னுடைய உடன்பிறந்தவர்கள் வீட்டிற்கு வரும்போது நன்றாக உபசரிப்பார்கள். அதேவேளையில், மாமனார் மாமியார் நாத்தனார் வரும்போதோ, அவர்களை, சரியான விதத்தில் உபசரிப்பதில்லை. அதுபோல, சில பெற்றோர்கள் தூரத்திலிருந்து தன்னுடைய பிள்ளை வந்தால் நன்றாக உபசரிப்பார்கள்; வீட்டிலிருக்கும் தன்னுடைய மருமகளையோ, சரியான விதத்தில் உபசரிப்பதில்லை. சபையிலும், சகோதர சகோதரிகளிடம் சிலர் நன்றாக முகம் கொடுத்து பேசுவதில்லை; சரியாக உபசரிப்பதில்லை. இப்படிப்பட்டவர்கள் எப்படி அந்நியர்களை உபசரிக்க முடியும். காண்கிற சகோதரனிடத்தில் அன்பு கூற தெரியாதவன், காணாத தேவனிடத்தில் எப்படி என்பு கூறுவான்? நான் என் சகோதரனுக்கு காவலாளியோ என்ற கேட்ட காயினை போல நாம் காணப்படலாகாது.

இயேசு ஒருமுறை சீடர்களிடம் ஒரு உவமையை சொன்னார்; பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார் (மத் 25:35,36) என்பதாக. இயேசு என்ன சொல்லுகிறார் என்று புரியாமல் சீஷர்கள் இயேசுவிடம், ஆண்டவரே எப்பொழுது இவையெல்லாம் நாங்கள் செய்தோம். எங்களுக்கு சற்றும் ஞாபகம் இல்லையே என்பதாக கேட்டார்கள். அதற்கு இயேசு சொன்னார், மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார் என்பதாக. பல நேரங்களில் நாம் மற்றவர்களை உபசரிக்க தவறும்போது, இயேசுவை உபசரிக்க தவறுகிறோம் என்ற எண்ணம் இல்லாமல் நமக்கு போய்விடுகிறது.

பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள் என்று ரோம 12:13 கூறுகிறது. யோபு சொல்லுகிறான், பரதேசி வீதியிலே இராத்தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன் (யோபு 31:32) என்பதாக. பவுல் சொல்லுகிறான், காயு என்பவன் என்னையும் சபையனைத்தையும் உபசரித்தான் என்பதாக (ரோம 16:23). அதுபோல, நாமும் சபையிலிருக்கிறவர்களை, அந்நியர்களை உபசரிப்போம். அப்பொழுது நாம் தேவ தூதர்களையும் உபசரிப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *