கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே (எண். 6:24-26).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_WYKekwDQmc
ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அழைக்கப்பட்ட ஆரோனிடமும் அவன் குமாரர்களிடமும் சொல்லும் படிக்கு மோசேயின் மூலம் கர்த்தர் கூறின வார்த்தைகள் என்னவென்றால் அவர்கள் ஜனங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதாக. அவர்கள் ஜனங்களை ஆசீர்வதித்து, கர்த்தருடைய ஆசீர்வாதமான நாமத்தை அவர்கள் மேல் கூறும் போது, அவர்களை நான் ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் வாக்கு கொடுத்தார். ஆசீர்வாதம் என்ற வார்த்தையை விரும்பாதவர்கள் ஒருவரும் இருப்பதில்லை. நாம் கையிடும் வேலைகள் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றும், ஆரோக்கியமும் சமாதானமுள்ள வாழ்க்கை வேண்டும் என்பதை எல்லாரும் விரும்புவார்கள். நாம் ஆராதிக்கிற தேவனும் நம்மை ஆசீர்வதிக்கவே விரும்புகிறார். ஆதிப்பெற்றோரை சிருஷ்டித்து, அவர்களை ஏதேன் தோட்டத்தில் கொண்டுவந்து, அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் என்று ஆதி. 1:28 கூறுகிறது. வெள்ளத்திற்குப் பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள் என்று ஆசீர்வதித்தார் என்று ஆதி. 9:1 கூறுகிறது. ஆபிரகாம் ஒருவனாய் இருக்கையில் அவனை ஆசீர்வதித்து பெருகப்பண்ணினார். இயேசுவும் ஜனங்களை ஆசீர்வதிக்கையில் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
மேற்குறிப்பிடப்பட்ட வசனங்களில் யேகோவா தேவனுடைய கர்த்தர் என்ற நாமம் மூன்று முறை எழுதப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்த இடத்தில் திரித்துவத்தைக் குறிப்பிடவில்லை என்றாலும், நம்முடைய திரியேக தேவனுடைய விருப்பம் நாம் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இருக்கவேண்டும் என்பதே. நன்மையான எந்த ஈவும் அவரிடத்திலிருந்து இறங்கி வருகிறது. உன்னை, உன்மேல், உனக்கு என்ற வார்த்தை ஆறுமுறை வருகிறது. அதிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பது அவருடைய பிரியம் என்பதைத் தெளிவாய் அறியமுடிகிறது. தேவன் உங்களை ஆசீர்வதித்து, உங்களைக் காக்கிறவர். பாதுகாப்பு என்பது இந்நாட்களின் முக்கியமான தேவையாய் காணப்படுகிறது. நீதியின் சூரியனாகிய அவருடைய முகத்தை உங்கள் மேல் பிரகாசிக்கப்பண்ணி, பிரசன்னமாக்கி உங்களுக்குக் கிருபையையும் சமாதானத்தையும் கட்டளையிடுவார். அவருடைய கிருபை உங்களை உயர்த்தும், ஷாலோம் என்ற வார்த்தையின் அர்த்தமாகிய சமாதானம் என்ற வார்த்தையில் தேவனுடைய பரிபூரணமான, திருப்தியான எல்லா நன்மைகளும் அடங்கியிருக்கிறது. அந்த எல்லா ஆசீர்வாதங்களையும் உங்களுக்குக் கட்டளையிட்டு உங்களை ஆசீர்வதிப்பார்.
சபையின் மேய்ப்பர்கள் ஜனங்களை மனதார ஆசீர்வதிக்க வேண்டும். பாவத்தையும் நீதியையும் நியாயத்தீர்ப்பையும் குறித்துக் கண்டித்து, கண்டனம் பண்ணி, சத்திய வசனத்தைப் பகுத்துப் போதித்தாலும், உள்ளான இருதயத்தின் வாஞ்சையெல்லாம் ஜனங்கள் ஆசீர்வாதமாகக் காணப்பட வேண்டும் என்பதாய் இருக்க வேண்டும். நாம் ஆண்டவருடைய நாமத்தை ஜனங்கள் மேல் கூறி அவர்களை ஆசீர்வதிக்கும் போது, கர்த்தர் ஜனங்களை ஆசீர்வதிப்பார். ஆண்டவருடைய பிரதிநிதியாய் நின்று நீங்கள் ஆசீர்வதிக்கிறீர்கள் என்பதை உணர்ந்து ஜனங்களை மனதார ஆசீர்வதியுங்கள். அப்போது மந்தையின் ஆடுகள் ஆசீர்வாதமாய் காணப்படுவார்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae