அமரிக்கையும், நம்பிக்கையுமே உங்கள் பெலன்.

அமரிக்கையும்,  நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார் (ஏசாயா 30:15).

அமரிக்கையும்,  நம்பிக்கையுமே உங்கள் பெலன் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் வாக்குக் கொடுக்கிறார். அமரிக்கை என்பது அமைதியாயிருப்பதைக் குறிக்கிறது. கலங்காமல், பயப்படாமல் இருப்பதைக் குறிக்கிறது. இந்த வாக்குத்தத்தத்தைக் கர்த்தர் யூதா ஜனங்களுக்குக் கொடுத்த சூழ்நிலையைப் பார்க்கும்போது,  அசீரியர்கள் யூதாவிற்கு விரோதமாய் யுத்தம் செய்ய ஆயத்தப்படுகிறார்கள்,  யூதாவின் ஜனங்கள் தங்கள் பாதுகாப்பிற்காக எகிப்தின்  உதவியைத் தேட முயற்ச்சிக்கிறார்கள். அந்த வேளையில் கர்த்தர் யூதாவின் ஜனங்களைப் பார்த்து நீங்கள் அமரிக்கையாயிருங்கள்,  உங்களுக்குள் சமாதான குலைச்சல் வேண்டாம்,  நானே உங்கள் பாதுகாப்பு என்று வாக்குக் கொடுக்கிறார். நீங்கள் உங்கள் பாதுகாப்பிற்காக மற்றவர்களிடம் அடைக்கலம் தேட வேண்டாம்,  என் வார்த்தையை நம்புங்கள்,  அதுவே உங்கள் பெலன் என்று கர்த்தர் கூறினார். 

கர்த்தருடைய பிள்ளைகளே,  உங்கள் பாதுகாப்பு இயேசுவாகக் காணப்படுகிறார். இக்கட்டான காலகட்டத்தில் அமைதியாயிருந்து,  அவருடைய வார்த்தையை நம்புங்கள். கர்த்தரை அறியாத ஜனங்கள் கொந்தளிக்கிற அலையைப் போல அமைதியையும்,  சமாதானத்தையும் இழந்து காணப்படுவார்கள். ஆனால் கர்த்தருடைய ஜனங்கள் அப்படிப்பட்டவர்களாய் காணப்பட வேண்டிய அவசியமில்லை. இயேசு சிலுவையில் சிந்தின இரத்தம் உங்களுடைய அடைக்கலமாய் காணப்படுகிறது. அந்த இரத்தத்தின் பாதுகாப்பிற்குள்ளாய் குடும்பமாய் எப்பொழுதும் காணப்படுங்கள். இயேசுவின் இரத்தத்திற்கு வெளியே பாதுகாப்பில்லை,  அவருடைய இரத்தத்திற்குள் தீங்கில்லை.  எகிப்தில் இஸ்ரவேல் ஜனங்களை சங்காரத்தூதனுடைய கரத்திலிருந்து பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் பாதுகாத்ததைப் போல,  இயேசு சிலுவையில் சிந்தின இரத்தம் உங்களைப் பாதுகாக்க வல்லமையுள்ளது. ஆகையால் உலக ஜனங்களைப் போலப் பதறிவிடாதிருங்கள்,  பயந்து போகாதிருங்கள். அவருடைய வார்த்தையை நம்பும் போது அமைதி உங்களுக்குள்ளாய் வரும்,  சமாதானமாயிருப்பீர்கள். தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும்,  ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்,  ஆகையால் நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் இக்கட்டான சூழ்நிலையில் மிக சமீபமான துணையாயிருந்து,  நீங்கள் கூப்பிடும் போது தீவிரித்து வந்து உங்களுக்கு உதவிசெய்வார்.

நீங்கள் அமர்ந்திருந்து,  நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்,  ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன்,  பூமியிலே உயர்ந்திருப்பேன் என்று வாக்களித்தவர்,  அவரே உயர்ந்தவர்,  வல்லமையுள்ளவர் என்பதைத் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *