வேதத்தை முக்கியப்படுத்தினார்:-

ஏசாயா 42:21 கர்த்தர் தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்.

ஏன் ஆண்டவர் வேதத்தை முக்கியப்படுத்தினார்?

முதலாவது, இந்த வேதாகமம் இயேசுகிறிஸ்த்துவினுடைய சாட்சியாக காணப்படுகிறது. இயேசு நான்கு சுவிசேங்களிலும் பழைய ஏற்பாட்டிலுள்ள வசனங்களை அதிகாரத்தோடு பயன்படுத்தியதை பார்க்கமுடியும். லூக்கா 4ம் அதிகாரத்தில் சாத்தானுடைய சோதனைகளை அவர் எதிர்கொள்ளும்போது, உபாகம புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வசனங்களை வைத்து அந்த சோதனைகளை மேற்கொண்டார். இயேசு தன்னுடைய ஊழியத்தை ஆரம்பிக்கும்போது இப்படி எழுதியிருக்கிறதே, இப்படி எழுதியிருக்கிறதே என்று மீண்டும் மீண்டுமாக பழைய ஏற்பாட்டு வசனங்களை அழுத்தமாக, அதிகாரமாக பயன்படுத்தினார். புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு சுவிசேஷகளிலும் இயேசு சுமார் 57 இடங்களில் பழைய ஏற்பாடு வசனங்களை பயன்படுத்தினார் என்று வேத அறிஞர்கள் சொல்கிறார்கள். எழுதப்பட்டவைகள் 57ஆக இருக்குமென்றால், எழுதப்படாத வார்த்தைகள் எத்தனை என்று சொல்லவே முடியாது. அந்த அளவிற்கு இயேசு அந்நாட்களில் பழைய ஏற்பாட்டு வசனங்களை பயன்படுத்தினார். இயேசு பரிசேயர்களுக்கும், சதுசேயர்களுக்கும் பதில்கொடுக்கும் சூழ்நிலை வந்தபோதெல்லாம், அவர் இப்படி எழுதியிருக்கிறதே என்று பழைய ஏற்பாடு வசனங்களை பயன்படுத்தினார். இக்காலத்தில் இருக்கும் ஒரு சில ஊழியர்கள், ஆண்டவருடைய வார்த்தை பயன்படுத்தாமல் உலகத்தில் தோன்றிய இயற்பியல் அறிஞர்கள், தத்துவர்கள், இறையியலார்களின் வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துவது ஒரு வேதனைக்குரிய காரியமாகும்.

இரண்டாவதாக, வேதாகமம் உண்மையில் பிசகாத ஒரே ஒரு புஸ்தகம். வேதாகமத்தில் மூன்றில் ஒரு பங்கு தீர்க்க தரிசனங்களாக காணப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, மரணம், உயிர்த்தெழுதலை குறித்து கூட நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பாகவே தீர்க்கதரிசனமாக எழுதப்பட்டிருக்கிறது. அவைகள் அனைத்தும் அப்படியே நிறைவேறினது. யூத ஜனங்களும் சிதறடிக்கப்பட்டு, திரும்பவும் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு வந்து குடியேறினவற்றை கூட நம் சொந்த நாட்களிலே தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியதை காணமுடிகிறது. இன்னும் இருக்கிற தீர்க்கதரிசனங்கள் ஒன்றுகூட பிசகாமல் அப்படியே நிறைவேறும் என்பதிலும் ஒரு சந்தேகமும் இல்லை.

மூன்றாவதாக, வேதாகமத்திலுள்ள அணைத்து 66 புஸ்தகங்களும், ஒன்றோடொன்று இணைந்து, ஜோடியாக, கோர்வையாக, ஒற்றுமையாக எழுதப்பட்டிருப்பது மற்றொரு ஆதாரம். நம் கையிலுள்ள வேதாகமம் மூன்று மொழிகளில் சுமார் 1600 வருட இடைவெளிகளில், 40 வெவ்வேறு நபர்களால், வெவ்வேறு பின்னணிகளில் அதாவது சிலர் ராஜாக்கள், சிலர் மேய்ப்பர்கள், சிலர் ராணுவத்தலைவர்கள், சிலர் பரிசேயர்கள், சிலர் மீன் பிடிக்கிறவர்களாக இருந்தவர்கள்; ஆனால் அனைத்தும் கோர்வையாக வந்திருப்பது மிகவும் ஆச்சர்யம். அடிப்படை சத்தியங்களும், நெறிமுறைகளும் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. அறிவியல் உண்மைகள் பலவற்றை வெளிபடித்தன புஸ்தகம். இன்றைக்கு இருக்கிற அறிவியல் சார்ந்த புஸ்தகங்கள் காலத்து காலம் மாறுபட்டுக்கொண்டே, திருத்தி அமைத்துக்கொண்டே காணப்படுகிறது. ஆனால் பரிசுத்த வேதாகம் திருத்தி எழுதப்படவில்லை காரணம் இது பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்பட்டது.

நான்காவதாக, முழு உலக சரித்திரத்திலும் வேதாகமம் கடந்து வந்த நெருக்கங்கள், உபத்திரவங்கள் போல வேறெந்த புத்தகமும் சந்திக்கவில்லை. அப்படிப்பட்ட உபத்திரவங்கள், விமர்சனம் வந்தாலும் இன்றும் வேதாகமம் அழிந்துபோகாமல் நிலைத்திருக்கிறது. பிரெஞ்சு நாஸ்திகள் வோல்டைர் என்பவர் சொன்னார் இன்னும் 100 வருடங்களில் கிறிஸ்துவம் இருக்காது, வேதாகமம் ஒளிந்து போய்விடும் என்பதாக. ஆனால் நடந்தது அவர் மரித்த 50 வருடங்களுக்கு பின்பு அவருடைய வீட்டிலே வேதாகமம் அச்சடிக்கப்பட்டு சரித்திரம் படைத்திருப்பதிலிருந்து கண்டுகொள்ளலாம் வேதாகமம் ஒழிந்துபோக வேண்டும் என்று சொன்னவர்கள் ஒழிந்து போனாலும் வேதாகமம் ஒரு போதும் ஒழிந்துபோவதில்லை.

ஐந்தாவதாக, இதில் எழுதியிருக்கிற வார்த்தைகள் அநேகருடைய வாழ்க்கையை மாற்றியமைத்திருக்கிறது. பரலோகத்திற்கு நேராக அழைத்து சென்றிருக்கிறது. அநேக மனிதர்கள் தங்களுடைய துன்மார்க்கங்களை விட்டு பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். ரட்சிப்பின் அனுபவத்தை பெற்று கிறிஸ்துவை அவமதித்தவர்கள், பின்னாட்களில் கிறிஸ்துவுக்காக மறிக்கவும் ஆயத்தமானார்கள்.

கடைசியாக, அநேக வேதாகம வித்வான்கள் சொல்வதெல்லாம் நாங்கள் 100 முறைக்கு மேலாக இந்த புத்தகத்தை படித்தாலும், ஒவ்வொருமுறையும் படிக்கும்போது புதிய புதிய வெளிப்பாடுகள் கிடைக்கிறதென்பதாக. இந்த புத்தகத்தில் மாத்திரம் தான் அனைத்து கேள்விகளுக்கும் பதில் காணப்படுகிறது. இந்த வேதாகமத்தின் மூலமாக தான் ஆண்டவர் ஒவ்வொரு நாளும் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார்.

இன்றும் இந்த உலகத்தில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்ற புஸ்தகம் பரிசுத்த வேதகமே.

உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.(சங்கீதம் 119:97) என்று சங்கீதக்காரன் சொல்வதைப்போல இந்த வேதமே நாள் முழுதும் உங்கள் தியானமாக மாறட்டும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *