ஏசா 50:4. இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.
இந்த வசனம் இயேசுவைக்குறித்து தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட வார்த்தை. இயேசு தன்னுடைய நாவை இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்லும்படி பயன்படுத்தினார். நாவு நம்முடைய உறுப்புகளில் மிக முக்கியமானதொன்று ஆகும். அது ஒருவனை கட்டவும் செய்யும், ஒருவனை இடிக்கவும் செய்யும். இயேசு அவருடைய வாயைக் கூர்மையான பட்டயமாக்கினார் (ஏசா 49:2) என்று வாசிக்கமுடியும். இப்படித்தான் நாம் நம்முடைய வாயை கூர்மையாக்கவேண்டும். எதை எந்த நேரத்தில் யாரிடம் பேச வேண்டும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.
இயேசு இளைப்படைந்து போன ஜனங்களுக்கு சமயத்துக்கேற்ற வார்த்தைகளை பேசினார். குஷ்டரோகி வந்து இயேசுவிடம் சுகத்திற்காக வந்தபோது, எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு என்று சொல்லி அவனை குணப்படுத்தினார். மோசே ஆண்டவரிடம் சொன்னான் ஆண்டவரே நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான். அதற்கு கர்த்தர் சொன்னார் நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்பதாக (யாத் 4:12).
ஒருமுறை பவுலைப் பிடித்து, அவனை தேவாலயத்திற்குப் புறம்பே இழுத்துக்கொண்டுபோனார்கள். அவனை கொலை செய்ய நினைத்தார்கள், எருசலேம் முழுவதும் கலக்கம் உண்டானது. அவனை அடித்தார்கள்; சங்கிலியால் கட்டி இழுத்துகொண்டுபோனார்கள். அப்பொழுது சமயத்துக்கேற்றபடி பவுல் கிரேக்க பாஷையிலை பேசத்தொடங்கினான். அவர்கள் நினைத்தார்கள் பவுல் ஒரு எகிப்தியனென்று. மாறாக சமயத்துக்கேற்றபடி பவுல் பேசினான்.
இயேசுவின் மீது அநேக பொய் குற்றசாட்டுகளை சொன்னபோது அவர் பேசாமல் அமைதியாய் இருந்தார். ஒருசமயத்தில் நீர் தேவனுடைய குமாரனாகிய கிருஸ்துவா என்று கேட்டார்கள். அதற்கு கர்த்தர் மறுமொழியாக ஆம் நீர் சொல்லுகிறபடியே நான் கிருஸ்து என்று சமயத்துக்கேற்ற படி பேசினார்.
யாராவது உள்ளம் உடைந்து தனித்துவிடப்பட்ட சூழ்நிலையில் உங்களை நாடி வருகிறார்களென்றால் அவர்களை இடித்து தள்ளாமல் சமயத்துக்கேற்ற நல் வார்த்தைகளை, வசனங்களை அவர்களுக்கு சொல்லுங்கள். ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது என்று ஞானி நீதிமொழிகள் புஸ்தகத்தில் சொல்கிறவனாக காணப்படுகிறான். அப்படிப்பட்ட கல்விமானின் நாவை கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவருக்கும் தரட்டும்.
நீதிமொழிகள் 25:11 ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org