ஒரு தேவ பிள்ளை வாழ்க்கையில் எதுவும் தற்செயலாய் நடப்பதில்லை!
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் நிதானித்து அறிகிறான் (1 cori 2:14) என்று வேதம் சொல்லுகிறது.
இன்றைக்கு ஏன் வீண் செலவுகள் மற்றும் நஷ்டங்கள் வருகிறது என்று சில காரியங்களை தியானிப்போம்.
1) தேவ பயம் / கீழ்படிதல் இல்லாமல் போகும்போது:
ஒரு மனிதன் கர்த்தருக்கு பயந்து நடக்கும்போது,அவனுக்கு வரும் பலன்களைக் குறித்து சங்கீதம் 128 சொல்கிறது. அதில் “உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் “ என்று (Psalm 128:2) சொல்லுகிறது. ஒருவேளை உங்கள் பிரயாசத்தின் பலன்களை நீங்கள் அனுபவிக்காமல் வீணாய் போகிறதா? நீங்கள் உண்மையில் தேவனுக்கு பயந்து நடக்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள்.
2) வேசித்தனம் :
ஒருவன் வேசித்தன பாவத்திற்கு இடம் கொடுக்கும் போது, அவனுடைய பிரயாசத்தின் பலனை அந்நியர்கள் புசிப்பார்கள் என்று நீதிமொழிகள் 5:10 சொல்லுகிறது. ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிறவன் அவளோடு விபச்சாரம் செய்கிறான் என்று தேவன் சொல்லியிருக்கிறார். (Mat 5:28) தவறான காட்சிகளை பார்ப்பதும் வேசித்தனமே. அப்படிப்பட்ட வேசித்தனப் பாவத்திற்கு இடம் கொடுக்கும் பொழுது பிரயாசத்தின் பலனை அந்நியர்கள் புசிப்பார்கள். (Prov 5:10)
3) தேவனுடைய இராஜ்ஜியத்தைக் குறித்த கரிசனையை இழக்கும் போது:
தேவனுடைய இராஜ்ஜியத்தைக் குறித்து கவலையீனமாய் நாம் இருக்கும்போது சில வேளைகளில் நாம் அதிகம் எதிர்பார்த்தும் கொஞ்சம் தான் வரும். பிரயாசத்துக்கு ஏற்ற பலனை பெற முடியாது. (Hagg 1:6-11).
இன்றைக்கு ஆலயங்கள் மூடப்பட்டுக் கிடக்கிறது. சுவிசேஷ ஊழியம் என்பது மிகவும் கடினமாக மாறிவருகிறது. ஊழியத்தின் தேவைகளும் ஏராளமாய் பெருகிவருகிறது. இவைகளைக் குறித்து நாம் பாரமற்றவர்களாய் காணப்படக் கூடாது.
4) தவறான முடிவுகள்
சில சமயங்களில் நாம் எடுக்கிற தவறான முடிவுகள், பெருமைக்காக செய்கிற காரியங்கள், மதியீனங்கள் நிமித்தமாக வீண் செலவுகள், நஷ்டங்கள் உண்டாகிறது. எனவே நாம் காரியங்களை தேவனுடைய ஆலோசனைப்படி செய்ய வேண்டும்.
5) சாபங்கள்
ஒருவேளை நம்முடைய வாழ்க்கையை முழுமையாக தேவனுக்கென்று அர்ப்பணிக்காமலும் , கிறிஸ்து நமக்காக சாபம் ஆனார் (Gal 3:13) என்ற சத்தியத்தை அறியாமலும் நாம் வாழ்வோம் என்றால் சில நேரங்களில் சாபங்கள் நிமித்தமாக வீண் செலவுகள் நமக்கு உண்டாகிறது.
6) சத்துருவினால் வரும் நஷ்டங்கள்:
பிசாசுக்கு திருடன் என்று பெயர். தேவன், பிசாசுக்கு அனுமதி கொடுத்தப் பொழுது, யோபுவின் வாழ்க்கையில் பலத்த நஷ்டத்தை உண்டாக்கினான். (Job 1) சத்துருவுக்கு நம்முடைய வாழ்க்கையில் இடம் கொடுக்கும் போது நஷ்டங்கள் நம்முடைய வாழ்க்கையிலே வருகிறது. எனவே நாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து பிசாசுக்கு எதிர்த்து நிற்கும் பொழுது அவன் ஓடிப்போவான்.
7) பண ஆசை இல்லாதவர்களாய் மாற்ற:
நாம் பண ஆசை இல்லாதவர்களாய் இருக்க வேண்டும் (Heb 13:5) என்று தேவன் விரும்புகிறார். சில நேரங்களில் நாம் சரியாக நடந்தாலும் சில நஷ்டங்கள் வரலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் மன ரம்மியமாய் இருந்தால் பண ஆசையில் இருந்து விடுபடுகிறோம்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக !
Thivakar.B
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

