எபி 4:14. வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.
மொத்தம் மூன்று வானம் இருப்பதாக வேதம் நமக்கு காண்பிக்கிறது. முதல் வானம் நாம் காண்கிற, நம்முடைய கண்களால் பார்க்க முடிகிற ஆகாயம். இந்த வானத்தில் தான் சூரியன், சந்திரன், பல கோடி நட்சத்திரங்கள் காணப்படுகிறது. காண்கிற பல கோடி நட்சத்திரத்திற்கு சொல்லவேண்டுமென்றால் பலகோடி ஒளியின் ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது (சங் 8:3) என்று சங்கீதக்காரன் முதல் வானத்தை குறித்து சொல்லுகிறதை பார்க்கலாம்.
மூன்றாம் வானம் நம் ஆண்டவர் வாசம் செய்கிற பரலோகமாக காணப்படுகிறது. பவுல் இந்த மூன்றாம் வானம் வரைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டான் என்று வசனம் சொல்லுகிறது. கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்(2 கொரி 12:2,3).
முதல் வானத்திற்கும் மூன்றாம் வானத்திற்கும் நடுவிலுள்ள இரண்டாம் வானத்தில் சாத்தானுடைய தலைமையகம் காணப்படுகிறது. அங்கே இருந்து தான் அவன் செயல்படுகிறவனாக காணப்படுகிறான்.
இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பிறகு வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போனார். நம்முடைய மூத்த சகோதரர் எப்படி வானங்கள் வழியாய் பிதாவினிடத்தில் சென்றாரோ, அதேபோல நாமும் வானங்கள் வழியாய் முதல் வானம், இரண்டாம் வானங்களை கடந்து பிதாவின் சமூகத்தில் போய் நிற்போம். அது எவ்வளவு பெரிய மேன்மையான காரியம். விமானத்தில் சுமார் 32,000 அடி உயரத்தில் தான் நாம் பறக்கமுடியும். ஆனால் நாம் பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்த பிறகு, பிதாவின் சித்தத்தை இயேசு செய்தது போல நாமும் செய்து முடித்த பிறகு நாளொன்று வரும் அப்பொழுது நாம் வானங்கள் வழியாய் கடந்து செல்வோம். பிசாசு இரண்டாம் வானத்தில் நின்று நம்மை வழி மரிக்காதபடியான ஜீவியம் செய்யும்படியாக ஒவ்வொருவரும் இயேசுவுக்கேற்ற பரிசுத்தத்தில் நடக்கும்படியாக கர்த்தர் விருப்பமுடையவராக காணப்படுகிறார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org