கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாகபோவதில்லை.

ஆகையால்,   எனக்குப் பிரியமான சகோதரரே,   கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து,   நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும்,   அசையாதவர்களாயும்,   கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக (1 கொரி. 15:58).

அனேக காரியங்களுக்காக நாம் அனுதினமும் பிரயாசப்படுகிறோம். மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே என்று சாலொமோன் ஞானி கூறுகிறார். ஒரு சாண் வயிருக்காக எல்லாரும் பிரயாசப்பட்டு உழைக்கிறோம். ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்றும் வேதம் கூறுகிறது,   வயிற்றுக்காக பிரயாசப்படுவது நல்லது. அதுபோல நம்முடைய குடும்பங்களுக்காக பிரயாசப்படுகிறோம். குடும்பத்திற்காய் வாழ்கிறேன்,   பிள்ளைகளுக்காக இரவு பகலாய் உழைக்கிறேன் என்று சொல்லுகிற அனேக சகோதரர்கள் உண்டு,   அதுவும் நல்லதாய் காணப்படுகிறது. கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் குடும்பத்தையும் பிள்ளைகளையும் போஷித்துக் காப்பாற்றவேண்டும் என்பது கர்த்தருடைய கட்டளையாகக் காணப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட காரியங்களோடு,   கர்த்தருக்காக நாம் படுகிற பிரயாசம் என்றும் ஒன்று காணப்படுகிறது. வயிற்றுக்காகவும்,   குடும்பத்திற்காகவும்,   பிள்ளைகளுக்காகவும் படுகிற பிரயாசத்தைப் போல ஆண்டவருக்காகவும் பிரயாசப்பட வேண்டும். ஒருவேளை பிள்ளைகளுக்காக எடுக்கிற பிரயாசங்கள் கூட,   உங்கள் கடைசி நாட்களில் உங்களுக்கு உதவாமல் போகலாம். ஆகையால் தான் திரளான வயோதிப பெற்றோர்கள் இந்நாட்களில் முதியோர் இல்லங்களில் காணப்படுகிறார்கள். ஆனால் ஆண்டவருக்காக நாம் எடுக்கிற எல்லாப் பிரயாசங்களுக்கும் பலனுண்டு. அவருடைய கரங்களில் காணப்படுகிற ஞாபகப் புஸ்தகத்தில் எல்லாவற்றையும் எழுதி வைத்து உங்களுக்குப் பதில் செய்வார். அவருடைய நாமத்திற்காக நீங்கள் காண்பித்த உங்கள் அன்பின் பிரயாசத்தை மறந்து விடுகிறதற்குத் அவர் அநீதியுள்ளவரல்ல என்று வேதம் கூறுகிறது. ஆகையால் கர்த்தருக்காக நாம் எடுக்கிற பிரயாசங்கள் இம்மையிலும் மறுமையிலும் நமக்குப் பலனைக் கொண்டு வரும்.

கர்த்தருடைய சுவிஷேத்திற்காக பிரயாசப்படுங்கள்,   அவருடைய ராஜ்யத்தின் விரிவாக்கத்திற்காக பிரயாசப்படுங்கள்,   ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட பிரயாசப்படுங்கள். இந்நாட்களில் கர்த்தருடைய பிள்ளைகள் கூட ஓய்வெடுத்து பொழுதைப் போக்க நினைக்கிறார்கள். உலகத்து ஜனங்களைப் போலச் சிற்றின்பங்களில் பொழுதை கழிக்க நினைக்கிறார்கள். வாலிபர்கள் கர்த்தருக்காகச் செயல்படுகிற பலவான் கையில் காணப்படுகிற அம்புக்கு ஒத்த பாத்திரங்களாகக் காணப்படுவதற்குப் பதிலாக முடங்கிப்போய் சமூக ஊடகங்களில் மூழ்கிப்போய் காணப்படுகிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் இளைப்பாறுகிற காலம் இனிதான் வரப்போகிறது என்று வேதம் கூறுகிறது. பூமியில் கர்த்தருக்காக பிரயாசப்பட்டவர்கள் நித்தியத்தில் ஆண்டவரோடு இளைப்பாறுவார்கள். பரலோகத்தில் நாம் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியது இல்லை,   வியர்வை சிந்த வேண்டியதும் இல்லை. பரதீசி என்றாலே இளைப்பாறுதலின் ஸ்தலம்,   ஓய்ந்திருக்கிற இடமாகக் காணப்படுகிறது. அங்கே தேவனைத் துதித்து ஆராதித்து அவரோடு எப்பொழுதும் மகிழ்ந்திருப்போம். பூமியில்,   எபேசு சபை விசுவாசிகளைப் போல,   இயேசுவின் நாமத்தினிமித்தம் களைப்படையாமல் பிரயாசப்பட்டவர்கள் பரலோகத்தில் அவரோடு மகிழ்ந்திருப்பார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் தன்னோடு ஊழியத்தில் மிகவும் பிரயாசப்பட்ட  எயோதியாளையும் சிந்திகேயாளையும் வாழ்த்தி அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது என்றார்,   அதுபோல கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட திரிபேனாளையும் திரிபோசாளையும் பெர்சியாளையும் வாழ்த்தினார். கர்த்தருடைய பிள்ளைகளே,   நீங்கள் கர்த்தருக்காக பிரயாசப்படும் போது பரலோகத்தின் தேவன் உங்களை வாழ்த்துவார், நீங்கள் ஆசீர்வாதமாய் உயர்ந்திருப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *