நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது. தானியேல் 9:23
தானியேலைப்பார்த்து காபிரியேல் தூதன் நீ கர்த்தருக்கு மிகவும் பிரியமானவன் என்று கூறினான். ஆகையால் தானியேல் ஜெபிக்க தொடங்கினபோதே பதில் வெளிப்பட்டது. பிரியமான புருஷனாகிய தானியேலே(10:11), பிரியமான புருஷனே(10:19), என்று தானியேல் திரும்பவும் அழைக்கப்படுகிறதை வேதத்தில் பார்க்கிறோம். தானியேல் கர்த்தருக்கு பிரியமானவனாய் காணப்பட்டதினால், அவனுடைய ஜெபங்கள் கேட்கப்பட்டது. அதுபோல அவன் சேவித்த ஐந்து ராஜாக்களின் நாட்களிலும் அவன் காரியம் ஜெயமாயிருந்தது.
கர்த்தருக்கு பிரியமான ஜீவியம் செய்கிறவர்களுடைய ஜெபம் கர்த்தருக்கு மிகவும் பிரியமானது. செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம் என்று நீதிமொழிகள் 15:8-ல் வாசிக்கிறோம். அப்படிப்பட்டவர்களுடைய ஜெபம் உடனடி பதிலைக் கொண்டுவரும். அவர்கள் காரியங்களும் ஜெயமாயிருக்கும்.
தானியேல் கர்த்தருக்கு மிகவும் பிரியமானவன் என்று நற்சாட்சி பெற்றதன் காரணம் என்ன?. அவனுடைய ஜெபஜீவியத்தோடு அனேக நற்குணங்களும் அவனில் காணப்பட்டது.
-தன் இருதயத்தில் எடுத்த தீர்மானம். ராஜாவின் போஜனத்தினாலும் பானத்தினாலும் நான் தீட்டுபடுவதில்லை (தானி. 1:8). புறஜாதிகள் தேசத்தில் அடிமையாக காணப்பட்டாலும் தன் பரிசுத்தத்தை குறித்த பயம் அவனில் காணப்பட்டது. விக்கிரக ஆராதனைக்கு, அவற்றிற்கு படைக்கப்பட்டவைகளுக்கும் விலகியோடவேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் காணப்பட்டது.
– உண்மையுள்ளவனாயிருந்தான். யாதொரு குற்றமும் குறைவும் அவனில் காணப்படவில்லை. நீதிகேடு செய்யாதவனாக காணப்பட்டான். (தானி. 6:4,22)
கர்த்தரை பிரியப்படுத்துகிற அவருடைய இருதயத்திற்கு ஏற்ற வாழ்வு வாழ நாம் நம்மை அர்ப்பணிக்கவேண்டும். எந்த இடங்களில், தேசங்களில் காணப்பட்டாலும், கர்த்தருக்குப் பிரியமானவன், அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான் (ஏசா-48:14) என்ற வசனத்தின்படி, எல்லா இடங்களிலும் கர்த்தருக்கு பிரியமானதை செய்ய நாம் வாஞ்சிக்கவேண்டும். உண்மையாய் நடக்கிறவர்களாய்(நீதி.12:22), நீதியும் நியாயமும் செய்கிறவர்களாய் (நீதி-21:3) கர்த்தருடைய ஜனங்கள் காணப்படவேண்டும். அப்போது கர்த்தர் உங்களில் பிரியப்படுவார். உங்கள் ஜெபங்களுக்கு உடனடி பதில் வரும். உங்கள் காரியங்கள் ஜெயமாயிருக்கும்.
மொர்தெகாய் தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனாயிருந்தான் (எஸ்தர்-10:3). தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான் என்று வேதம் சாட்சி கொடுக்கிறது. ஜனங்களுடைய நன்மைக்காய், அவர்கள் சமாதானத்திற்காய் பேசுவதும் ஜெபிப்பதும் கூட கர்த்தருக்கு பிரியம். அவைகளை நீங்கள் செய்யும்போது கர்த்தர் உங்களை தானியேலைப்போல, மொர்தெகாயை போல உயர்த்துவார்.
நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்.,கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார், உன் தேசம் வாழ்க்கைப்படும் (ஏசா.62:4) என்ற வசனத்தின்படி கர்த்தருடைய பிரியம் உங்கள்மேல் இருக்கும். என் பிரியமே (உன். 1:15) என்று கர்த்தர் உங்களை அழைப்பார். கோரேசைக் குறித்து கர்த்தர் சொல்லும் போது அவன் எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் (ஏசா. 44:28) என்று நம்பிக்கையோடு சொன்னார். அதுபோல நீங்களும் கர்த்தருக்கு பிரியமாவனவைகளை செய்ய கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக.
கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக!
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
www.wogim.org