பிசாசை ஓடவிடுவது எப்படி? (How to make Devil to flee?).

அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்,     தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. ஆகையால்,     தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்,     பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்,     அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான் (யாக். 4:6,    7).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/pY6yUAps59s

நாம் ஆராதிக்கிற தேவன் தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கிறவர்,     பெருமையுள்ளவர்களுக்கு  எதிர்த்து நிற்கிறவர். ஆகையால் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து தாழ்மையோடு நீங்கள் வாழும் போது,       பிசாசைத் தைரியத்தோடு எதிர்க்கமுடியும்,     அவன் உங்களை விட்டு ஓடிப்போவான். முதன்முதலில் பாவம் மேட்டிமையினால் வந்தது. பிசாசு நான் வானத்துக்கு ஏறுவேன்,     தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்,     வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன்,     உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று தன் இருதயத்தில்  சொன்னான்,     ஆகையால் தேவன் அவனைத் தள்ளிப் போட்டார். மனுகுலத்தின் முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவாளுக்குள்ளும் பிசாசு அவனுடைய சுபாவமாகிய மேட்டிமையை விதைத்து,     விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியைப் புசிக்கும் படிக்குச் செய்தான். அதைப் புசிக்கும் போது உங்கள் கண்கள் திறக்கப்பட்டு தேவனுக்கு ஒப்பாக மாறுவீர்கள் என்று மேட்டிமை என்ற வஞ்சக விதையை அவர்களுக்குள் விதைத்தான். ஆதிப்பெற்றோருடைய  இருதயமும் மேட்டிமைக் கொண்டு விலக்கப்பட்ட,     நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்து பாவம் செய்தார்கள். இந்நாட்களிலும் அதே மேட்டிமையின் சிந்தையை விசுவாசிகளுக்குள்ளும்,     ஊழியர்களுக்குள்ளும் விதைத்து,     அவர்களை வீழ்த்துகிறவனாய் பிசாசு காணப்படுகிறான். 

கர்த்தருடைய பிள்ளைகள் கிறிஸ்து இயேசுவில் காணப்பட்ட தாழ்மையின் சிந்தையை அணிந்தவர்களாய் காணப்பட வேண்டும். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்,     என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள் என்று இயேசு கூறினார். இயேசுவின் ஊழியத்தின் நாட்களில்,     உலகத்தின் அதிபதியாகிய பிசாசு அவரைச் சோதிக்குப்படிக்குப் பலமுறை வந்தான். ஆனால் இயேசு தாழ்மையின் சொரூபியாய் காணப்பட்டதினால் அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை,     ஆகையால் அவன் இயேசுவை விட்டு ஓடிப்போனான். அதுபோல விசுவாசிகளாகிய நாமும் தாழ்மையின் சிந்தையைத் தரித்து,     தாழ்மையோடு வாழும் போது பிசாசு நம்மை விட்டு ஓடிப்போவான். மேட்டிமையின் சிந்தை நம்மில் கொஞ்சம் காணப்பட்டால் கூட,     பிசாசுக்கு இடம் கொடுக்கிறவர்களாய் காணப்படுவதினால் அவன் உங்களை ஆக்கிரமித்து ஆளுகை செய்து விடுவான். அவனுக்கு நீங்கள் எதிர்த்து நின்றாலும்,     அவனுடைய சுபாவம் உங்களுக்குள் காணப்படுவதினால் அவன் ஒருநாளும் உங்களை விட்டு ஓடிப்போவதில்லை. 

நீங்கள் தாழ்மையின் சிந்தையோடு காணப்படும் போது கர்த்தர் உங்களுக்கு அதிகமான கிருபையைத் தருவார். அந்த கிருபை உங்களை உயர்த்தும். தன்னைத்தான் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்,     தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்பது கர்த்தருடைய வார்த்தை(மத். 23:12). ஆகையால் தாழ்மையின் சிந்தையைத் தரித்து வாழுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *