பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.

கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். நியாயாதிபதிகள் 6:12.

மீதியானியர்களுக்கு பயந்து, ஆலையில் கோதுமையை போரடிக்காமல், ஆலைக்கு சமீபமாய் வேறொரு இடத்தில் போரடித்த கிதியோனைப்பார்த்து கர்த்தர் பராக்கிரமசாலியே என்று அழைக்கிறதைப்பார்க்கிறோம். சாதாரணமானவர்களை அசாதாரணமானவர்களாய் பார்க்கும் தேவன்! பயப்படுகிறவர்களை பராக்கிரமசாலியாய் பார்க்கும் தேவன்! என்னால் என்ன செய்யக்கூடும், எனக்கு ஞானம் இல்லையே, என் குடும்பம் மிகவும் எளியது, ஏழ்மையில் காணப்படுகிறேன் என்று எண்ணுகிறீர்களோ, உங்களை கொண்டு கர்த்தர் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும். நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன் என்று சொன்ன மோசேயைக்கொண்டு இருபது லட்சங்களுக்கு மேற்பட்ட ஜனங்களை நடத்தின கர்த்தர். தகுதிகள் இல்லாதவர்களை தகுதிப்படுத்தி, பெரியக்காரியங்களை செய்கிற தேவன். உங்களுக்கு இருக்கிற பலத்தோடு கர்த்தருக்காக எழும்புங்கள். இருக்கிறதைக்கொடுத்தால் அதைக்கொண்டு மகத்துவமானவைகளை செய்கிற தேவன்.

கிதியோனுக்கு கர்த்தர் அருளின வார்த்தை, நான் உன்னோடே கூட இருப்பேன், ஒரே மனுஷனை முறியடிப்பது போல நீ மீதியானியரை முறியடிப்பாய் (நியா. 6:16).  கர்த்தர் நம்மோடு காணப்படவேண்டும். அவர் நம்மைவிட்டு கடந்துசென்றுவிடக்கூடாது. அவருக்கு பிரியமில்லாத காரியங்களைச் நாம் செய்வதினால், பாவங்கள் செய்வதினால், ஆண்டவருடைய பிரசன்னத்தை இழந்துவிடக்கூடாது.  பாவத்தில் விழுந்த சிம்சோன் பெலிஸ்தியர்கள் தன்னைப்பிடிக்க வந்த வேளையில் எப்போதும் போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்று ஆவியானவருடைய பலம் தன்னைவிட்டு கடந்துசென்றதை உணராமலே சொன்னான். ஆனால் பெலிஸ்தியர் அவனைப்பிடித்து கண்களைப் பிடுங்கி, விலங்குபோட்டு, சிறைச்சாலையில் மாவரைக்கும்படி செய்தார்கள். அதுபோல இஸ்ரவேல் ஜனங்கள் பாவம்செய்த வேளையில், தேவன் மோசேயைப்பார்த்து சொன்னார், நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள் (யாத். 33:3). இவ்வார்த்தைகளை அவர்கள் கேட்டபோது துக்கித்தார்கள், காரணம் ஆண்டவர் அவர்களோடு இல்லையென்றால் அவர்களால் ஒரு அடிகூட வனாந்தரத்தில் கடந்துசெல்லமுடியாது. அவர்கள் மனங்கசந்தவேளையில் ஆண்டவர் தன் இருதயத்தை மாற்றி சொன்னார், என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும் (யாத். 33:14).

ஏரேமியா தீர்க்கன் சொன்னார், கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார்; ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும் (எரே.20:11). கர்த்தர் பயங்கரமான பராக்கிரமசாலி. அவர் உங்களோடு இருப்பேன் என்று வாக்களிக்கிறார். உங்களை பராக்கிரமசாலிகளாய் மாற்றுவார்.  உங்களைக்கொண்டு பெரியகாரியங்களை செய்வார்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Ennai Belappaduthum Christhu Yesuval, Uthamiyae Vol. 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *