உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 1 பேதுரு 5:7.

கர்த்தர் உங்களை விசாரிக்கிறவர். விசாரித்து உதவி செய்கிறவர். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்நாட்களில், பலவிதமான கவலைகள் நம்மை பாரப்படுத்துகிறது. பிள்ளைகளுக்கு படிப்பு பாரமாகிவிடுகிறது. வாலிபர்களுக்கு எதிர்காலத்தைக்குறித்த பாரம்.  இளம்குடும்பங்களில் சமாதானக்கேடும் பிரிவினைகளும் அவர்களைப் பாரப்படுத்துகிறது. பாரங்களும், கஷ்டங்களும் எவ்விதங்களில் இருந்தாலும், நம்மை விசாரித்து, விடுவிக்கிற, நல்ல தகப்பன் உண்டு என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

யாக்கோபு இருபது வருடங்களுக்கு பிறகு தன் சொந்த தேசத்திற்கு திரும்பி வரும் வழியில் தன் சகோதரன் 400 பேரோடு தன்னை சந்திக்க வருகிறான் என்பதை அறிந்தவுடன், அவன் பழிவாங்க வருகிறான் என்று நினைத்து, கவலைப்படுகிறான். இரண்டு கூட்டங்களாய் தன் குடும்பத்தை பிரித்துவிடுகிறான். ஏசா ஒரு கூட்டத்தின்மேல் விழுந்து அழித்தாலும் இன்னொருக்கூட்டமாகவும் தப்பும் என்று எண்ணியிருக்கக்கூடும். அன்னாள் பிள்ளையில்லாமல் கவலைப்பட்டாள். அவளுடைய சக்களத்தியாகிய பெனின்னாளின் வார்த்தைகளும் அவளைக் கவலை கொள்ளும்படி செய்தது. மொர்தெகாயும், யூத ஜனங்களும் மிகவும் கவலைகொண்டார்கள், காரணம் ஒரே நாளில் அவர்கள் எல்லோரும் அழிக்கப்படுவதற்கு  இராஜாவினிடத்தில் இருந்து உத்தரவு பிறந்ததினிமித்தம் பயமும் கலக்கமும் அவர்களைப் பிடித்தது.  இவர்களைப்போல பலவிதங்களில் கவலைகள் நம்மை கலங்கும்படி செய்தாலும், நம்மை விசாரிக்கிற நல்ல தேவன் நமக்கு உண்டு.

 நம்முடைய தேவனுடைய நாமங்களில் ஒன்று “எல்ஷடாய்” என்பது. சர்வ வல்லமையுள்ள தேவன் என்பது ஒரு அர்த்தமாயிருந்தாலும், இன்னொரு அர்த்தம் “தாயுள்ளம் கொண்ட தந்தை” “Many breasted God” என்பதாய்  காணப்படுகிறது. தாயைப்போல நம்மை விசாரிக்கிறவர். ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன் (ஏசா. 66:13) என்பது கர்த்தருடைய வாக்குத்தத்தம்.

கர்த்தர் நம்மை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் எல்லா கவலைகளையும், பாரங்களையும் அவர் மேல் வைத்துவிடுங்கள். கல்வாரி சிலுவையில் உங்கள் பாவம் என்னும் பாரத்தை சுமந்து தீர்த்த தேவன், உங்கள் பாடுகள், வேதனைகள், கஷ்டங்கள், பாரங்களையும் மாற்றுவதற்கு வல்லமையுள்ளவர்.  நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள்.  அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் (பிலிப்பியர் 4: 6-7). ஆனால், அனேகவேளைகளில் அவரிடம் தெரியப்படுத்துவதற்கு பதிலாக, நாமே சுமக்கிறோம். நாமாகவே நம்மை அனேக வேதனைகளால் நம்மை உருவக்குத்துகிறோம்.  ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்தேயு 6:25) என்று ஒன்றைக்குறித்தும் நாம் கவலைப்படவேண்டாம் என்று கர்த்தர் சொல்லுகிறார். கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? கவலைப்படுவதினால் ஒன்றும் ஆவதில்லை. கவலைகள் நம்மை அழித்துவிடும். ஆகையால் நம்மை விசாரிக்கிற கர்த்தர்மேல் நம் பாரங்களை வைத்துவிட்டு, அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு காணப்பட கர்த்தர் உங்களுக்கு உதவிசெய்வாராக. கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார் (சங். 55:22).

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org

Yaen Azhukintrai Kannae, Uthamiyae Vol. 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *