தேவரீர் உமது சபையை நினைத்தருளும்.

நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளும்(சங்கீதம் 74:2).

தேவனே உமது மேய்ச்சலின் ஆடுகளைகளையும், நீர் சம்பாதித்த உமது சபையையும் நினைத்தருளும். சீயோனாகிய உமது சபை இன்று அடைப்பட்டு கிடக்கிறது. உமது சீயோன் பர்வதத்தை ஒரு விசை நினைத்தருளும். நீர், நீரே, பயங்கரமானவர், உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்? எங்கள் மேல் இருக்கும் உமது உக்கிரத்தை எடுத்துப்போடும். எங்கள் அக்கிரமங்களையும், மீறுதல்களையும் மன்னியும். எங்கள் மீறுதல்களை நாங்கள் அறிந்திருக்கிறோம், எங்களை ஒருவிசை மன்னித்து கழுவி சுத்திகரியும். நீர் அடைத்ததை யார்தான் திறக்கமுடியும், நீர் திறந்ததை யார்தான் அடைக்கமுடியும். ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிற சர்வவல்லவரும் நீரே(வெளி 3:7) பூமியிலுள்ள சிறுமைப்பட்டவர்களை இரட்சிக்க தேவரீர் எழுந்தருளும்.

எகிப்திலே அடைப்பட்டிருந்த தமது ஜனங்களை நினைத்தருளினீர். சிறைப்பட்டிருந்த அவர்களை விடுவித்து அவர்களின் வாழ்க்கையை செழிப்பாக மாற்றினீர். அவர்களுக்கு தடையாகயிருந்த சமுத்திரத்தை உமது வல்லமையால் இரண்டாகப் பிளந்து நடக்கசெய்தீர், வனாந்தரத்தில் நடந்தபோது தூதர்களின் அப்பத்தை புசிக்க கொடுத்தீர். ஊற்றையும் ஆற்றையும் பிளந்து மகா நதிகளையும் வற்றிப்போகப்பண்ணினீர். வனாந்தரத்திலே கன்மலைகளைப்பிளந்து, மகா ஆழங்களிலிருந்து, தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர். கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தீர், பகலிலே மேகத்தினாலும், இராமுழுதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தி(சங்கீதம் 78:14) சீயோனை சுதந்தரிக்க செய்தீர்.

தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். எங்களுக்குண்டான நெருக்கங்களையும், தடைகளையும் உடைத்தெரியும். எங்களுக்கு எதிராக செயல்படுகின்ற கொள்ளை நோய்களை அழித்துப்போடும். நீர் எங்களுக்கு வாக்குப்பண்ணினதை நினைத்தருளும், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் (யாத் 15:26) என்று சொன்னீரே, எங்களுக்கு இறங்கும், உமது முகத்தை எங்கள் மீது பிரகாசப்பண்ணும். யாக்கோப்பை உமது புயத்தினாலே மீட்டுக்கொண்டதுப்போல, எங்களையும் உம்முடைய மிகுந்த கிருபையினாலும், இரக்கத்தினாலும் மீட்டுக்கொள்ளும், நீர் வாசமாயிருக்கிற உம்முடைய சீயோனை சுதந்தரிக்க எங்களையும் நினைத்தருளும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்

David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *