சேராபீன்கள்(Seraphs):-

ஏசா 6 : 2,3. சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/hgG3F5hxHxQ

தேவ தூதர்களில் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் சேராபீன் தூதர்கள். இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு மேலாக நிற்பவர்கள். இவர்களுக்கு ஆறு செட்டைகள் உண்டு. இதில் அற்புதம் என்னவென்றால் தேவனுடைய மகிமையை தரிசிக்க முடியாதபடியால் தங்கள் இரண்டு செட்டைகளால் முகத்தை மூடிக்கொள்கிறார்கள். சர்வவல்லவருக்குரிய மகிமையை செலுத்தும்படி இரண்டு செட்டைகளால் தங்கள் கால்களை மூடிக்கொள்கிறார்கள். தேவனுடைய வேலையை செய்யும்படி இரண்டு செட்டைகளால் அடித்து செல்ல ஆயத்தமாயிருப்பவர்கள். சேராபீன்கள் என்று அழைக்கப்படுவதால் அவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.

இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால், ஒருவரை ஒருவர் கூப்பிட்டு தேவனின் பரிசுத்தத்தையும், அவருடைய பெரிய செயல்களை சொல்வதே அவர்களின் வேலையாக காணப்படுகிறது. இவர்கள் இடைவிடாமல் சர்வ வல்லவரை ஆராதிப்பவர்கள். அவர்களது சத்தத்தினால் தேவாலயம் புகையினால் நிறைந்தது. வானத்திலுள்ள அஸ்திபாரம் அசையத்தக்கதாக, கதவுகள் அதிரத்தக்கதாக அவர்களின் சத்தம் தொனித்தது.

இந்த சேராபீன்களுக்கு கரங்கள் உண்டு. தன் கையிலே பிடித்த குறட்டால் தீர்க்கதரிசியின் உதடுகளை சேராபீன்களில் ஒரு தேவ தூதன் வந்து தொட்டான். தேவ தூதர்களுக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் இல்லாதபடியால், தேவனின் சார்பாக சேராபீன் பேசுகிறவனாக காணப்படுகிறான்.

இடைவிடாமல் பரிசுத்த தேவனை பார்த்து பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று ஓய்வில்லாமல் ஆராதித்துக்கொண்டிருக்கும் இந்த சேராபீன்களை போல நாமும் கூட உயரமும் உன்னதமுமானவரை பார்த்து பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று ஆராதிக்க வேண்டும் என்று கர்த்தர் விருப்பமுடையவராய் காணப்படுகிறார். காரணம் வசனம் சொல்கிறது பரலோகத்தில் செய்யப்படுவதைப்போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக எனபதாக.

தேவன் ஒருவரே பரிசுத்தர் என்று சொல்லுவோம். அல்லேலூயா!

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *