உங்கள் உயர்வு கர்த்தரிடத்திலிருந்து வரும் (Your promotion will come from the Lord).

யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும்,     யூதருக்குள் பெரியவனும்,     தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றித் தன் ஜனங்களுடைய நன்மையை நாடி,     தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான் (எஸ்தர் 10:3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/0GCGlDX-Mzw

உங்களுடைய உயர்வு கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து வராது,     அது கர்த்தரிடத்திலிருந்து மாத்திரம் வரும்.  பென்யமீனியனாகிய  மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதனை  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்,     யூதாவின் ராஜாவாகிய  எகொனியாவைப்  பிடித்துக்கொண்டு போகிறபோது,     அவனோடே கூட எருசலேமிலிருந்து  பிடித்துக்கொண்டு  போனான். அவன் அத்சாள் என்ற எஸ்தரின் சிறிய தகப்பன். அடிமையாய் கொண்டு போகப்பட்ட அவனை ராஜாவாகிய  அகாஸ்வேருவின் அடுத்த இடத்தில் கர்த்தர் உயர்த்தினார்.   அடிமையாய் விற்கப்பட்ட யோசேப்பை எகிப்தின் அதிபதியாய் உயர்த்தினது போல் அவனையும் கர்த்தர் உயர்த்தினார். ஆகையால் கர்த்தர் ஒருவரே ஒருவனைத் தாழ்த்தி,     ஒருவனை உயர்த்துகிறவர். உங்கள் உலக வேலைகளில்,     தொழில்களில்,     ஊழியங்களில் கர்த்தர் உங்களை உயர்த்தி,     நீங்கள்  கையிடுகிற எல்லாக் காரியங்களிலும் உங்களுக்கு ஜெயத்தைக் கட்டளையிடுவார்.

மொர்தேகாயைக் காத்தர் உயர்த்தினதன் காரியம்,     அவன் தன் கடமையில் உண்மையுள்ளவனாய் காணப்பட்டான். உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் என்று வேதம் கூறுகிறது. அவன் அரண்மனையின் வாசலில் அமர்ந்திருக்கிற சாதாரண வேலையைச் செய்தாலும்,     ராஜாவைக் கொல்லுவதற்கு உண்டான சதித்திட்டத்தை அவருக்கு அறிவித்து,     ராஜாவைக் காப்பாற்றினான். அதற்குரிய கனம் ராஜாவினிடத்திலிருந்து அவனுக்குக் கிடைக்கவில்லை,     அதற்குப் பதிலாக,     ஆமானை ராஜா தனக்கு அடுத்த இடத்தில் உயர்த்தி வைத்தான். அதன்பின்பு,     மற்ற எல்லாரும் ஆமானை வணங்கிப் பணிந்து கொண்ட வேளையில்,     மொர்தேகாய் அப்படிச் செய்யவில்லை. தன் விசுவாசத்திற்காக உத்தமமாய் நின்றான். அவன் இஸ்ரவேலின் தேவனை மாத்திரம் தொழுகிறவனாய் காணப்பட்டதினால்  ஆமானைப்  பணிந்துகொள்ளவில்லை. ஆகையால் ஆமான்,     மொர்தேகாயை மிகவும் வெறுத்தான். அவனையும் அவனுடைய ஜனங்களையும் ஒரே நாளில் அழிப்பதற்கு ஆமான் திட்டம் தீட்டினான். அதையறிந்த மொர்தேகாய்,     தன்னுடைய ஜனங்களை அதிகமாய் நேசித்ததின் நிமித்தம் அவர்களைக் காப்பாற்ற முடிவுசெய்தான். ஆகையால் அவன் அந்தக் காரியத்தை எஸ்தர் ராஜாத்திக்கு அறிவித்தான். அவளோடு சேர்ந்து,     தானும் சூசானில் இருக்கிற மற்ற யூதர் எல்லாரும் மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும்  குடியாமலுமிருந்து உபவாசம் பண்ணி தேவனை நோக்கி ஜெபித்தார்கள். அதனிமித்தம் காரியம் மாறுதலாய் முடிந்தது,     ஆமானும் அவனுடைய ஜனங்களும் அழிக்கப்பட்டார்கள். இப்படியாய் யூத ஜனங்களின் நன்மையை நாடி,     அவர்களுடைய  சமாதானத்திற்காகப்  பேசுகிறவனாய் மொர்தேகாய் காணப்பட்டான். கடைசியில் ஒரு நாள் நாளாகமப் புஸ்தகத்தை ராஜா வாசிக்கும் போது,     மொர்தேகாய் தன்னைக் காப்பாற்றின செய்தியை அறிந்து அவனை தனக்கு அடுத்த இடத்தில் உயர்த்தி வைத்தான். அவன் யூதருக்குள் பெரியவனாய் காணப்பட்டான்.

கர்த்தருடைய பிள்ளைகளே,     கர்த்தர் உங்களை உயர்த்துவதற்கு,     நீங்கள் உண்மையுள்ளவர்களாய் காணப்படுங்கள். தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால்,     அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல்,     ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான் என்று வேதம் கூறுகிறது. உங்கள் விசுவாசத்திற்காக உத்தமமாய் போராடுங்கள். ஜனங்களுக்காகவும்,     தேசங்களுக்காகவும்,     ஆளுகை செய்கிறவர்களுக்காகவும் மன்றாடி ஜெபியுங்கள். அப்போது கர்த்தர் உங்கள் தலைகளை உயர்த்தி,     உங்களை பெரியவனாக்கி,     பெயர் பெறும்படி செய்து ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *