என் மீட்பர் உயிரோடிருக்கிறார்.

என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன் (யோபு 19:25).

யோபு, உபத்திரவங்கள் பாடுகள் நடுவில் விசுவாசத்தைக் காத்துக்கொண்ட தேவ மனுஷன். சகலமும் நன்றாய் நடக்கும் போது, விசுவாச ஜீவியம் செய்வது எளிது. ஆனால் கடினமான சூழ்நிலைகளில் கர்த்தருக்குள் வாழ்வது கடினம். யோபு ஒரே நாளில் தன் ஆஸ்திகளை இழந்தான், அன்பான பிள்ளைகள் அத்தனைப் பேரையும் இழந்தான், அதோடு உச்சந்தலை துவங்கி உள்ளங்கால் மட்டும் வியாதியினால் வாதிக்கப்பட்டான். இந்த சூழ்நிலையிலும் இயேசுவை அவனுடைய கண்கள் கண்டது. அவருக்கு மீட்பர் என்ற பெயரையும் போட்டான். யோபு, ஆபிரகாமின் நாட்களில், பிரமாணங்கள் கொடுக்கப்படுவதற்கு முன்பு வாழ்ந்தவன் என்று கருதப்படுகிறது. இயேசுவுக்கு முன்பு சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பாக வாழ்ந்திருக்கக்கூடும். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.  அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும் (யோபு 19:26,27); என்று உறுதியான நம்பிக்கை உடையவனாகக் காணப்பட்டான். பாடுகளுக்குப் பின்பு பரமனைக் காண்பேன் என்ற விசுவாசம் அவனுக்குள் இருந்தது. அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று அறிக்கையிட்டான். ஆகையால் பாடுகள் மத்தியிலும் தன்னை பூரணமாகக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தான்.

கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் இயேசுவை உயிரோடிருக்கிறவராகப் பாருங்கள். அவர் அறியாதபடி ஒன்றும் உங்கள் வாழ்க்கையில் சம்பவிப்பதில்லை. ஒருவேளை நீங்கள் பாடுகள், வேதனைகள் வழியாகக் கடந்துசெல்லலாம். அன்பானவர்களை இழந்திருக்கக் கூடும், ஆஸ்தி ஐசுவரியங்களை இழந்திருக்கலாம், வியாதியினால் பாதிக்கப்பட்டவர்களாய்கூட காணப்படலாம். உங்கள் உறவினர்கள் நண்பர்கள் உங்களைக் கைவிட்டிருக்கலாம். உங்கள் எல்லா நிலைமைகளிலும், மரித்தேன் ஆனாலும் சதாகாலங்களில் உயிரோடிருக்கிறேன் என்று வாக்களித்த ஆண்டவரை நோக்கிப்பாருங்கள். அவர் நம்முடைய பாவங்களுக்காக மரித்தது உண்மை. ஆனால் மூன்றாம் நாள் உயிரோடெழுந்தார். அவர் இனி மரிப்பதில்லை. அவர் பிதாவின் வலதுப்பாரிசத்தில் இருந்து உங்களுக்காகப் பரிந்து பேசுகிறவராகக் காணப்படுகிறார். அவர் உயிரோடிருப்பதினால் உங்கள் காரியங்களை அவர் பார்த்துக்கொள்வார்.

மார்டடின் லூதர் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிற ஒரு நபர். ஆனால் அவர் மனச்சோர்வினால் (Depression) அவ்வப்போது கஷ்டப்படுகிறவராகவும் காணப்பட்டார். ஒருமுறை அதிக  மனச்சோர்வோடு காணப்பட்ட வேளையில் அவருடைய மனைவி, பிள்ளைகள் எல்லாரும் கருப்பு நிற ஆடைகளை அணிந்து வீட்டில் காணப்பட்டார்களாம். அந்த வேளையில் மார்ட்டின் லூதர், யார் இறந்துபோனார்கள், எல்லாரும் கருப்புநிற ஆடைகளை அணிந்திருக்கிறீர்களே என்ற வேளையில் அவர் மனைவி சொன்னார்களாம், இயேசு இறந்துபோனர். ஒருவேளை உயிரோடிருக்கிற ஆண்டவரை நம்புகிறவராக நீர் இருந்தால், இப்படி மனம் சோர்ந்துபோன நிலையிலிருப்பதில்லை என்றார்களாம். அப்போது மார்டடின் லூதர் தன் மனைவியைப் பார்த்து நீ குணசாலி. என் செய்கைகள் இயேசு மரித்துப்போனவரைப்போலக் காணப்பட்டது. இனி நான் அப்படி இருப்பதில்லை என்று சொன்னாராம்.

யோபு, இயேசுவை மரித்தோராய் அல்ல, உயிரோடிருக்கிறவராகக் கண்டதினால், கர்த்தர் எல்லாவற்றையும் இரண்டத்தனையாக அவனுக்குத் திரும்பக்கொடுத்தார். கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார். திரளான செல்வங்களைக் கொடுத்தார். அழகான பிள்ளைகளைக் கொடுத்தார். நண்பர்கள், உறவினர்களைத் திரும்ப அவனிடத்தில் வந்தார்கள். நெடுநாள் உயிரோடிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான். அதுபோல நீங்களும் இயேசுவை உயிரோடிருக்கிறவராய் உங்கள் எல்லாச்சூழ்நிலைகளிலும் காண்பீர்கள் என்றால் உங்கள் நிலைமைகள் மாறும். இரட்டிப்பான ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். அவர் சகலவற்றையும் உங்கள் வாழ்க்கையில் நன்மைக்கேதுவாக செய்து முடிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *