பார்வோனின் ஆவி(Pharoah’s spirit).

யாத்திராகமம் 5 : 1,2. பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்.  அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போக விடுவதில்லை என்றான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/RyCjCF2pfQA

பார்வோனின் ஆவி மிகவும் பிடிவாதமான ஆவி, மக்களை அடிமைத்தனத்தில் பார்க்க விரும்பும் ஆவி. பார்வோனின் ஆவி ஒரு நபர், குடும்பம், இடம் அல்லது அடிமைத்தனத்தை கட்டுப்படுத்தும் ஒரு வலிமையான பிரதான அரக்கன். இந்த ஆவி ஒருபோதும் ஒரு அடிமையை சுதந்திரமாக இருக்க அனுமதிக்காது.இந்த ஆவி வறுமைக் கோட்டுக்குக் கீழே வேலை செய்ய அல்லது வாழ வைக்கும். இந்த ஆவி குழந்தைகளை கொல்லும் பொல்லாத ஆவி. . மந்திரம், சூனியம், மற்றும் கணிப்பு ஆகியவற்றால் நிறைந்த பொல்லாத ஆவி. தேவ மனிதர்களை அச்சுறுத்தும் ஆவி. குறிப்பாக சபைக்கு செல்வதை கர்த்தரை ஆராதிக்க செய்வதை தடுக்கும் அசுத்த ஆவி.

இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை ஆராதிக்க அனுப்பும்படியாக பார்வோனிடம் கேட்டபோது, அவன் அநேக தடைகளை கொண்டுவந்தான். இஸ்ரவேல் ஜனங்களுக்கு வேலைப்பளுவை முன்னிருந்ததை காட்டிலும் இப்பொழுது அதிகமாக்கினான். இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுக்கும்படியாக சூழ்நிலைகளை கொண்டு வர காரணமானான். நாம் சபைக்கு ஆராதிக்க செல்வதற்க்கு அநேக தடைகளை சத்துரு கொண்டுவரலாம். வேலையில் பிரச்சனை, குடும்பத்தில் குழப்பம், விசுவாசிகளுக்குள் முறுமுறுப்பு இப்படியாக பல சிக்கல்களை கொண்டுவரலாம். குறிப்பாக உபவாச ஜெபங்கள், எழுப்புதல் கூட்டங்கள், சுவிசேஷ கூட்டங்கள் மற்றும் சபை ஆராதனையில் பங்குகொள்ள தடைகள் வரும்போது, கர்த்தருடைய பிள்ளைகள் முதலாவது அறிந்துகொள்ளவேண்டியதென்னவென்றால், இந்த தடைகளை கொண்டு வருவது பார்வோனின் பொல்லாத ஆவி என்று. காரணம் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை ஆராதிக்க செல்லும்போது அவன் தான் தடையாக காணப்பட்டான். எவ்வளவு முறை தடைகளை அவன் கொண்டுவந்தாலும், மோசே சோர்ந்து போகவில்லை. இப்படிப்பட்டதான சூழ்நிலைகள் வரும்போது அஞ்சி, கலங்கி, சோர்ந்துபோய் விடவேண்டாம்.

அடுத்ததாக நீண்ட தொலைவில் சென்று ஆராதிக்கவேண்டாம், எகிப்து தேசத்திலேயே ஆராதனை செய்யுங்கள் என்று கூறினான். இப்படித்தான் இந்நாட்களில் அநேகர், சபைக்கு சென்று எதற்கு ஆராதிக்கவேண்டும். அதற்குப்பதிலாக வலைத்தளங்களிலேயே ஆராதனையை பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லக்கூடிய சபை இந்நாட்களில் வந்துவிட்டது. ஒருசில சபைகளில் ஸ்கைப் போன்ற வலைத்தளங்களில் ஜெபக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது; யூடூப்பில் சுவிசேஷத்தை கேட்டு வீட்டில் இருந்துவிடும் அநேக விசுவாசிகள் யாரோ ஒருவர் அனுப்பும் வாட்சப் செய்தியை படித்துவிட்டு, வேதாகமத்தை திறக்காத அநேக ஜனங்கள்;  தேவ ஜனமே இப்படிப்பட்டதான காரியங்களை கொண்டு வருவது பார்வோனின் பொல்லாத ஆவி என்று விசுவாசிகளாகிய நாம் அறிந்து கொள்ளவேண்டும். உறுதியுடன் கர்த்தரை ஆராதிக்க செல்வீர்களென்றால் கர்த்தர் மேகஸ்தம்பமாக, அக்கினிஸ்தம்பமாக உங்களை காத்து நடத்துவார். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்.

தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திருப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான். உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள் (யாத் 15 : 9 , 10 ).

இந்த பொல்லாத பார்வோனின் ஆவிகளை கட்டி ஜெபியுங்கள். கர்த்தர் தம்முடைய நாசியின் சுவாசத்தால் பார்வோன் என்னும் சந்துருவை திரளான தண்ணீர்களில் அழித்துப்போடுவார்.

கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *