இந்திய தேசம்:-

எஸ்தர் 1 : 1. இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது

எஸ்தர் 8 : 9. ….. மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.

மேலே உள்ள இரண்டு வசனங்களிலும் இந்து தேசம் என்பது ஆங்கிலத்தில் இந்தியா என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்திய தேசத்தை கர்த்தர் வேதாகமத்தில் எழுதி வைத்திருப்பது ஒரு ஆசிர்வாதமான காரியம்.

இந்தியா என்பதற்கு எபிரேய பாஷையில் HODU என்று சொல்லப்படுகிறது. அர்த்தம் ஆங்கிலத்தில் GIVE THANKS என்பதாக காணப்படுகிறது. தமிழில் நன்றி செலுத்தும் தேசம் என்று அர்த்தம். உண்மையாகவே இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் கர்த்தர் பாராட்டின நன்மைகளை நினைத்து நன்றி சொல்பவர்களாகவே காணப்பட வேண்டும். தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள் (கொலோசெயர் 3:15 ) என்ற வசனத்தின்படி நன்றி நிறைந்த இருதயம் உள்ளவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம்.

இந்த இரண்டு வசனங்களிலும். எத்தியோப்பியாவிலிருந்து இந்துதேசம் வரை என்று அல்ல; மாறாக இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரை என்று எழுதப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் ஒரு துவக்கத்தை கர்த்தர் குறிக்கிறதை பார்க்கிறோம். எப்படி கிழக்கிலிருந்து மேற்கு வரை, ஒன்றிலிருந்து நூறு வரை என்று சொல்கிறோமோ அதுபோல இந்தியாவிலிருந்து என்றால் கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் மூலமாக கர்த்தர் உரைத்த தீர்க்கதரிசனத்தின்படி கடைசி கால எழுப்புதல் இந்தியாவிலிருந்து தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவும் என்பதில் சந்தேகமில்லை. தென்கொரிய எழுப்புதலுக்கு கர்த்தர் பயன்படுத்தின பால் யான்கி சோ சொல்கிறார் கடைசி கால எழுப்புதல் ஆசிய நாடுகளிலொன்றிலிருந்து ஆரம்பிக்கும் என்பதாக. கர்த்தர் எழுப்புதலுக்காக பயன்படத்தப்போகும் தேசம் இந்திய தேசம் என்பதில் சந்தேகமில்லை. பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன் (லூக்கா 12:49) என்ற வார்த்தையின் உங்கள் மீது விழும் அக்கினி உலகமெங்கும் பரவும்.

இயேசுவின் சீடர்களில் ஒருவரான தோமாவை ஆவியானவர் இந்திய தேசத்திற்கு சுவிசேஷத்தை அறிவிக்கும்படியாக அனுப்பினார். அவர் அநேக ஜனங்களுக்கு இயேசுவை மெய்யான ரட்சகர் என்று சொல்லி தேவாலயங்களை நிறுவி முடிவில் இந்தியாவில் குறிப்பாக சென்னை மாகாணத்தில் ரத்தசாட்சியாக மரித்தார். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும் (யோவான் 12:24.) என்ற வசந்தின் படி தோமா என்ற கோதுமை விழுந்ததினிமித்தம் மிகுந்த பலன் என்னும் எழுப்புதல் இந்தியாவிலிருந்து உண்டாகும்.

இந்தியாவின் அப்போஸ்தலன் என்றழைக்கப்படும் சாது சுந்தர் சிங் கிறிஸ்துவை சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டு நடைப்பயணமாகவே இந்தியாவின் பல இடங்கள், திபெத், மற்றும் ஸ்ரீலங்கா நாடுகளில் இடைவிடாமல் இயேசுவை குறித்து பிரசங்கம் செய்தார். இப்படி இடைவிடாமல் இயேசுவை கிருஸ்து என்று சொல்லும் தலைமுறையை இயேசு இந்தியாவில் உருவாக்குவார் என்பதில் சந்தேகமில்லை. தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள் (அப் 5 : 42).

நாம் வாழும் தேசம் கர்த்தர் முன்குறித்த தேசம் என்பதை நினைவில்கொண்டு யேசுவுக்காக செயல்படுவோம்.

கர்த்தருடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of god church
Doha – Qatar
www.wogim.org