என் சத்துருக்களுக்கு முன்பாக ஒரு பந்தி (A Table before mine enemies).

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி,    என் தலையை  எண்ணெயால்  அபிஷேகம்பண்ணுகிறீர்,    என் பாத்திரம் நிரம்பி வழிகிறது(சங். 23:5).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/oVhBUI1ZtZs

சத்துருக்கள் எங்கும் சூழ்ந்திருக்கும் நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு மனுஷனுக்கு அவன் வீட்டாரே சத்துரு என்று வேதம் கூறுகிறது. இயேசுவும் யூதாசை தன்னுடன் வைத்திருந்தார்,    அவன் இயேசுவை முத்தத்தினால் காட்டிக் கொடுத்த வேளையில்,    மனுஷகுமாரனை முத்தத்தினாலா காட்டிக்கொடுக்கிறாய் என்று இயேசு கேட்டார். பரிசேயரும், சதுசேயரும், வேதபாரகர்களும் சத்துருக்களாய் அவரைப் பின் தொடர்ந்தார்கள். தாவீதின் உயிரை ஒரு தெள்ளுப்பூச்சியை வேட்டையாடுவது போலச் சவுல் வேட்டையாடும்படி பின் தொடர்ந்தான். தானியேலுக்கு அவனுடன் அதிகாரத்தில் காணப்பட்டவர்கள் சத்துருக்களாய் காணப்பட்டார்கள். ரோம பேரரசர் ஜூலியஸ் சீசர்,    தன் உயிர் நண்பனாக புருட்டஸ் என்பவனை நம்பினான்,    ஆனால் அவனோ சீசரின் எதிரிகளோடு சேர்ந்து அவரைக் கொலை செய்ய குத்தின வேளையில்,    அதை நம்ப முடியாமல் நீயுமா புருட்டஸ் என்று துக்கத்தோடு கேட்டு உயிர்விட்டான். கர்த்தருடைய பிள்ளைகளே,    உங்களுக்குத் தீங்கு செய்யும்படிக்கு அனேகர் எழும்பலாம். நீங்கள் எதிர்பாராத நபர்கள் எதிரிகளைப் போல எழும்பலாம். உதவியாய் காணப்பாடுவார்கள் என்று நீங்கள் கருதுபவர்கள் உங்களை உபத்திரவப் படுத்தலாம்,  சோர்ந்து போகாதிருங்கள். 


அப்படிப்பட்டவர்கள் நடுவில் கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துவார். உங்கள் தலையைக் கர்த்தர் உயர்த்தி,    நிமிர்ந்து நடக்கும் படிக்குச் செய்வார்,    உங்கள் விளக்குகளை எரியும் படிக்குச் செய்வார். நீங்கள் ஒருநாளும் கீழாவதில்லை,    கர்த்தர் உங்களை மேலாய் வைப்பார்.  நீங்கள் வாலாய் இருப்பதில்லை,    கர்த்தர் உங்களைத் தலையாக்குவார். நீங்கள் உயர்த்தப்படுவதை உங்கள் சத்துருக்கள் கண்டு வெட்கி நாணமடையும்படிக்கு   செய்வார். அவர்களுக்கு  முன்பு,     உங்களுக்கு ஒரு பந்தியை ஆயத்தம் பண்ணி,    விருந்து சாலையில் உங்களை   அழைத்துக்கொண்டு வந்து,    உங்கள் மேல் தன் நேசக்கொடியை பறக்கும் படிக்குச் செய்து,    உங்களைக் கனப்படுத்துவார். உங்கள் சத்துருக்களுக்கு நேரிடுவதை உங்கள் கண்கள் காணும் படிக்குக் செய்வார். உங்கள் தலைகளை எண்ணெய்யினால் அபிஷேகம் செய்து உங்கள் பாத்திரங்கள் நிரம்பி வழியும் படிக்குக்  செய்வார். தாவீதை,    குற்றம்சாட்டுகிற அவன் சகோதரர்கள் நடுவில் அபிஷேகித்து ராஜாவாக உயர்த்தின தேவன்,    உங்கள் ஒவ்வொருவருக்கும் அப்படியே செய்வார். உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம,    உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்,    இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும்,    என்னாலுண்டான  அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகையால் மகிழ்ச்சியோடு தேவனைச் சேவியுங்கள்,    இந்த புதிய மாதம் முழுவதும் கர்த்தர் உங்களோடு கூட இருந்து உங்களுக்காகப் பெரியக் காரியங்களைச் செய்து உங்களைக் கனம் பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae