யோவான் 13:18 உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/7r3uS1CVU4M
செல்வம் என்ற நபர் தன்னுடைய கஷ்டத்தினால் மிகவும் வியாகுலத்தோடு வேலை தேடி கொண்டிருந்தார். ஏதாவது வேலை கிடைக்காதா என்ற பாரம் உள்ளதை தாக்கியது. ஒரு அலுவலகத்தில் வேலை தேடி சென்று மேலதிகாரியை சந்தித்து தன்னுடைய பாரங்களையெல்லாம் சொல்லி தனக்கு வேலையொன்று கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த மேலதிகாரி இரக்கப்பட்டு செல்வத்திற்கு வேலை கொடுத்தார். அந்த நபருக்கு போதிய திறமைகள் இல்லாதிருந்தும் அநேக சந்தர்ப்பங்களை மேலதிகாரி கொடுத்துக்கொண்டு வந்தார். செல்வம் என்ற அந்த நபர் வேலையில் அமர்த்தப்பட்ட பிறகும் அநேக தவறுகள் செய்தும் அந்த மேலதிகாரி அவரை உற்சாகமூட்டி வேலையில் நல்ல இடத்தில கொண்டு வந்தார். நாளடைவில் அந்த செல்வம் என்ற நபர் தன்னை வேலைக்கு அமர்த்தியா மேலதிகாரிக்கு விரோதமாக செயல்பட ஆரம்பித்தார்; அவருக்கு தலைகுனிவை கொண்டுவரத்தக்கதாக, அந்த மேலதிகாரிக்கு விரோதமாக செயல்பட்டார். அந்த மேலதிகாரிக்கு ஒரே வருத்தம்; நான் எழுப்பிக்கொண்டு வந்த இந்த நபர் எனக்கு விரோதமாக செயல்படுகிறான் என்ற பாரம் உள்ளதை அழுத்தியது.
அதேபோல் தான் இயேசு தன்னுடைய சீசனாக ஒன்றுக்குமே பிரயோஜனமில்லாத யூதாஸ் காரியோத்தை தெரிந்தெடுத்தார். பணப்பைகளையெல்லாம் கொடுத்து பராமரிக்கும்படி நல்ல வேலையெல்லாம் கொடுத்தார். தன்னோடு போஜனம் கொள்ளுமாறு மிக அருகாமையில் இருக்கும் வாய்ப்பையெல்லாம் கொடுத்தார். ஆனால் யூதாஸ் செய்த காரியம் என்ன? தன்னுடைய எஜமானுக்கு விரோதமாக தன் குதிகாலை தூக்கினான். முப்பது வெள்ளிக்காசுக்கு ஆசை பட்டு ஒரு பாவமும் அறியாத இயேசுவை காட்டிக்கொடுத்தான். இயேசுவுக்கு மிகவும் துக்கத்தை, பாரத்தை அவருக்கு வேதனையை கொடுத்தான். நிச்சயமாகவே இயேசுவின் உள்ளம் காயம் அடைந்ததாக காணப்பட்டது.
சங்கீதக்காரனாகிய தாவீதும் சொல்லுகிறான் என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான் (சங் 41 : 9 ).
நம்முடைய வாழ்க்கையில் இயேசு செய்த நன்மைகள், உயர்வுகள், ஆசீர்வாதங்கள் ஏராளமாயிருக்கும். நமக்கு தெரிந்தும் தெரியாத கண்ணிகளிலுமிருந்து நம்மை காப்பாற்றியிருப்பார். அநேக ஆபத்துகளிலிருந்து நம்மை தப்புவித்திருப்பார். நல்ல வேலை, நல்ல குடும்பம், நல்ல சபை, சமாதானம், சந்தோசம் என்று எல்லாம் தந்திருப்பார். நீண்ட நாள் காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவந்திருப்பார். இவையெல்லாவற்றையும் மறந்து இயேசுவுக்கு விரோதமாக குதிகாலை மட்டும் தூக்காதிருங்கள். யூதாஸ் காரியோத்து செய்த அதே தவற்றை வாழ் நாளில் ஒரு முறைகூட செய்யாமல் இருக்க கவனமாயிருங்கள்.
மாறாக, இயேசு செய்த நன்மைகளை நினைத்து அவரை துதித்து கொண்டே இருப்பீர்களென்றால் உங்களை அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார் ( சங்கீதம் 147:14 ) என்ற வசனத்தின்படி ஆசீர்வதிப்பார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org