விடாமல் தொடரும் எழுப்புதல்(A non-stop revival):-

அப் 28:31. மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/S3Ae1rKIoMI

லியனார்ட் ரேவன்ஹில் என்ற ஊழியக்காரர் எழுப்புதலை குறித்து அதிகமாக பிரசங்கித்து வந்தார். அவரிடம் வந்து ஒரு நேர்முக சந்திப்பில் ஒருவர் கேட்டார், அய்யா அநேகர் இப்படியாக சொல்லுகிறார்கள் வேதாகமத்தில் எழுப்புதல் என்ற வார்த்தை இல்லையே, அப்படியிருக்க நீங்கள் எழுப்புதல் எழுப்புதல் என்று பிதற்றுகிறீர்கள் என்று சிலர் சொல்லுகிறார்கள் என்ற கேள்வியை முன் வைத்தார். அதற்கு அவர் சொன்னார் எழுப்புதலை குறித்து வேதாகமம் ஒன்றும் சொல்லவில்லை என்பவர்களுக்கு சொல்கிறேன், நீங்கள் அப்போஸ்தல நடபடிகளின் புஸ்தகத்தை படியுங்கள். அங்கே நீங்கள் பல எழுப்புதலை பார்க்கலாம் என்பதாக.

புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தல நடபடிகள், யாக்கோபு, புஸ்தகத்தை தவிர மற்ற புஸ்தகங்களெல்லாம் ஆமென் என்றும் வாழ்த்துதல் சொல்லுகிறோம் என்றும் முடிகிறது. ஒரு முடிவோடு கூட புஸ்தகங்களெல்லாம் எழுதி முடிக்கப்பட்டிருக்கிறது. யாக்கோபு புஸ்தகமும் கூட தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன் (யாக்கோ 5:20) என்றே முடிகிறது. ஆனால் அப்போஸ்தல நடப்படிகளின் புஸ்தகம் மாத்திரம் முடிவில்லாமல் தொடர்ச்சியாகவே இருப்பதை பார்க்கலாம். தேவனுடைய இராஜ்ஜியத்தை குறித்து பிரசங்கித்துக்கொண்டிருக்கையில், இயேசுகிறிஸ்துவை பற்றி உபதேசித்துக்கொண்டிருக்கிறதாய் ஒரு தொடர்ச்சியாக முடிவடைகிறது. இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளுவது எழுப்புதலை யாரும் தடை செய்ய முடியாது, அந்த எழுப்புதல் நின்று போய்விடாது என்பது தேவ சித்தம் என்பதாக தான்.

அப்போஸ்தல நாட்களில் பேதுரு, பவுல் மற்றும் பல அப்போஸ்தலர்கள் மூலமாக எழுப்புதல் யூதர்கள் மற்றும் புறஜாதிகள் மத்தியில் பரவியது. அதன் பின்னர் தொடர்ச்சியாக சரித்திரத்தை புரட்டி பார்க்கும்போதும் கூட அன்று ஆதி அப்போஸ்தல நாட்களில் உண்டான எழுப்புதல் தொடர்ந்து பல நாடுகளில் பல தேவ ஊழியர்கள் மூலமாக எழுப்புதல் பரவிக்கொண்டே வந்தது. கடந்த 2000 வருடங்களில் கிறிஸ்துவின் ஊழியத்திற்கு பல தடைகள் வந்த போதும் சுவிசேஷம் பரவிக்கொண்டே தான் வந்தது எழுப்புதல் பல தேவ மனிதர்கள் மூலமாக ஜோனத்தான் எட்வர்ட்ஸ், ஜான் வெஸ்லி, ஜார்ஜ் ஒய்ட்பீல்டு, சார்லஸ் க்ராண்டிசன், ஜான் G லேக், A.W டோசர், பில்லி கிரஹாம் போன்ற தேவ மனிதர்களாலும் இந்திய தேசத்திலும் கூட சாது சுந்தர் சிங்க், DGS தினகரன், ஜீவானந்தம் போன்ற தேவ மனிதர்களாலும் பரவிக்கொண்டே தான் வந்தது. இன்றும் அதே எழுப்புதல் பல இடங்களில் பல தேவ மனிதர்கள் மூலமாக நடைபெற்றுக்கொண்டு தான் காணப்படுகிறது. ஆண்டவர் பல வாலிபர்களை, பிள்ளைகளை இன்றும் கடைசிகால எழுப்புதலுக்கு ஆயத்தப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார். கடந்த நூற்றாண்டுகளில் ஆங்காங்கே உண்டான எழுப்புதல் கடைசி காலத்தில் உலகம் முழுவதும் உண்டாகும். பல நெருக்கத்தின் மத்தியிலும் சபை நிறைந்து வழியும், ஆயிரக்கணக்கான ஜனங்கள், இராஜாக்கள் கர்த்தர் பக்கமாக திரும்புவார்கள். இவைகளெல்லாம் அப்போஸ்தல நடபடிகளின் தொடர்ச்சி மாதிரியாகவே காணப்படும். அந்த எழுப்புதலுக்கு ஆயத்தமாகி கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை கொண்டு பெரிய காரியங்களை செய்வார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org