திறவுகோல் (Key).

தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான் (ஏசா.22:22).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/OvEojtkgGGs

திறவுகோல் என்பது சாவியைக் குறிக்கிறது. ஒரு வீட்டைத் திறக்கவும், வாகனத்தை இயக்கவும் எப்படி திறவுகோல் பயன்படுகிறதோ, தேவனுடைய அனேக நன்மைகளையும ஆசீர்வாதங்களையும், அதிகாரங்களையும்,  வேத இரகசியங்களையும் பெற்றுக் கொள்ளுவதற்கு அவர் நமக்குக் கொடுக்கிற  திறவுகோலைப்  பயன்படுத்த வேண்டும். இல்க்கியாவின்  குமாரனாகிய எலியாக்கீம்  என்னும் கர்த்தருடைய   ஊழியக்காரனைக் கர்த்தர்  அழைத்து  அவனை அதிகாரப்படுத்தி, எருசலேமின் குடிகளுக்கும்,  யூதாவின் வம்சத்துக்கும் அவனைத் தகப்பனாக்கி, அவனை உறுதியான இடத்திலே ஆணியாகக் கடாவுவேன், அவன் தன் தகப்பன் வீட்டுக்கு மகிமையான சிங்காசனமாக இருப்பான் என்று   அவனுக்கு வாக்குக் கொடுத்தார். அதோடு தாவீதின் வீட்டின் திறவு கோலையும் அவனுக்குக்  கொடுத்தார். இது ஒரு வீட்டின் திறவுகோலாய் காணப்படுகிறது. கர்த்தர் தாவீதை தன் இருதயத்திற்கு ஏற்றவனாகக் கண்டார். அவன் எனக்குச் சித்தமானதை எல்லாம் செய்வான் என்று அவனைக் குறித்து சாட்சி கொடுத்தார். ஆகையால் அவனுக்கு நிலையான வீட்டைக் கட்ட கர்த்தர் சித்தம் கொண்டார். அவனுடைய சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும் என்று கூறி அவனோடு உடன்படிக்கை செய்கிறவராகவும் காணப்பட்டார். தாவீதின் குமாரனாய் இயேசு பிறந்ததினால் அவனுக்குக் கொடுத்த அத்தனை வாக்குத் தத்தங்களும் நிறைவேறினது.

கர்த்தருடைய பிள்ளைகளே, தாவீதின் வீட்டின் திறவுகோல்களை; உங்களுக்கும் தருவேன் என்று கர்த்தர் இந்த புதிய மாதத்தில் வாக்கு கொடுக்கிறார்.  தாவீதின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அவருக்குப் பிரியமானதைச் செய்து, அவருடைய சித்தத்தை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றும் போது அந்த திறவுகோலைக்  கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் அந்த திறவுகோலைப் பெற்றுக் கொள்ளும் போது, உங்கள் வீட்டில் சந்தோஷமும், சமாதானமும் காணப்படும். அவருடைய கண்களுக்கு முன்பாக உங்கள் வீடு என்றும் நிலைத்து நிற்கும். கர்த்தருடைய  இரகசியம் உங்கள் குடும்பத்தோடு காணப்படும். உங்கள் பிள்ளைகள் உங்களைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப் போல வளருவார்கள். அவர்கள் எதிர்காலம் சிறப்பாயிருக்கும்.  உங்களுக்குப்  பாக்கியமும் நன்மையும் உண்டாகும்.  தாவீது வர வர விருத்தியடைந்தான் சேனைகளின் கர்த்தர் அவனோடு இருந்தார் என்று வேதம் கூறுகிறது. கர்த்தர் உங்களோடிருந்து உங்களையும் விருத்தியடைந்து பெருகும்படிக்குச் செய்வார்.   

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae