சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே(Buy the truth and do not sell it).

சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே, அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு(நீதி. 23:23).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/w-k6v2sDQpg

கிறிஸ்தவம் ஒரு மதமல்ல, அது ஒரு மார்க்கம். அதற்கு சத்திய மார்க்கம் என்பது இன்னொரு பெயர். இயேசு சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்கும்படிக்கு பிறந்தார் அதற்காகவே இந்ந பூமியில் வந்தார், சத்தியவான் எவனும் அவருடைய சத்தத்தைக் கேட்கிறான். அவருடைய வசனம்   முழுவதும் சத்தியமாய் காணப்படுகிறது. உலகத்தில் அனேக புனித நூல்கள் காணப்பட்டாலும், நம்முடைய வேதமே சத்திய வேதம்.  நம்மோடு ஐக்கியமாயிருக்கும் ஆவியானவருக்கு சத்திய ஆவியானவர் என்று பெயர், அவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துகிறவர். ஜீவனுள்ள தேவனுடைய சபையும் சத்தியத்திற்கு தூணும் ஆதாரமுமாய் காணப்படுகிறது. கர்த்தருடைய பிள்ளைகள் சத்தியத்தை வாங்குகிறவர்களாய் காணப்படுங்கள். சத்திய வசனத்தை வாசித்து, அதைக் கேட்டு, அதின்படி வாழ்ந்து உங்கள் வாழ்க்கையை கட்டி எழுப்புங்கள். யோவான் அவனுடைய வயோதிப நாட்களில் அவனுடைய ஆவிக்குரிய பிள்ளைகளாய் காணப்பட்ட காயுவும், கனம் பொருந்திய ஸ்திரீயாகிய அம்பாளுடைய பிள்ளைகளும் சத்தியத்திலே  நடக்கிறார்கள் என்பதையறிந்து அவன் அதிகமாய் மகிழ்ச்சியடைந்தான்.

சத்தியத்திற்கும், பொய்க்கும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. பொய் எப்போதும் கவர்ச்சியாகவும் இன்பமாககவும் இருப்பதினால் அனேகர் பொய்யை நம்புகிறார்கள். பிசாசின் கவர்ச்சியான வார்த்தைகளை ஏவாள் நம்பினாள். அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறான், சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை, அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். அவனைப் பின்பற்றுகிற தலைவர்களும் ஊழியர்களும் அவனைப் போலவே பொய்களை பேசுகிறார்கள். இயேசு இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து கூறினார், நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை என்பதாக. கர்த்தருடைய பிள்ளைகளே, சத்தியத்தை வாங்குங்கள். நீங்கள் சபைகளை தெரிந்தெடுக்கும் போது அங்கே சத்தியம் பிரசங்கிக்கப்படுகிறா என்பதை   முதலாவது சோதித்தறியுங்கள். பெரேயா பட்டணத்தின் ஜனங்கள் பவுலின் பிரசங்கத்தைக் கூட வேதத்தோடு ஒப்பிட்டு பார்த்ததினால், அவர்கள் நற்குணசாலிகளாயிருந்தார்கள் என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய கண்கள் சத்தியத்தையும், சத்தியவான்களையும் இந்நாட்களில் நோக்குகிறது என்பதை மறந்து போய்விடாதிருங்கள்.

ஊழியர்கள் சத்தியத்தை ஒருநாளும் விற்றுவிடாதிருங்கள். இந்நாட்களில் சத்தியத்தை விற்று பணமாக்குவது எப்படி என்பதற்காக பலவிதமான முறைமைகளை கையாளுகிற பக்கவாட்டில் நுழைந்தவர்களை பார்க்கமுடிகிறது. அவர்களால் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படுகிறது. யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்ததைப் போல இயேசுவை வியாபாரப் பொருளாக்கி விற்கிற திரளான பொல்லாத வேளையாட்கள் காணப்படுகிறார்கள். ஊடகங்களால் வஞ்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் நிமித்தம், கூத்தாடிகள் எங்கும் சுற்றித்திரிகிறார்கள். சினிமாத் துறைகளில் காணப்படுகிறவர்களோடு தங்களை ஒப்பிட்டு ஊழியம் செய்கிறவர்களும் பெருகிவிட்டார்கள். ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான் என்று 2யோவான் 1:10,11 நம்மை எச்சரிக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, சத்தியத்திற்காய் போராடுங்கள். கடைசி நாட்களில் வசனம் கேட்கக் கூடாத பஞ்சகாலம் வரும் என்று வேதம் கூறுகிறது. அந்த நாட்கள் இந்நாட்களாய் காணப்படுகிறது. கர்த்தருடைய துப்புரவான வார்த்தைகளில் வளர உங்கள் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் கிருபை பாராட்டுவாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae