கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை  நிறைவேற்றக் கவனமாயிருங்கள் (Fulfill the ministry that you have received from the Lord).

அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்(கொலோ. 4:17).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/e79J1YYcmqM

பவுல் சிறைச்சாலையிலிருந்து பிலேமோனுக்கு எழுதும் போது,    எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன் வேலையாளுமாயிருக்கிற  பிலேமோனுக்கும்,    பிரியமுள்ள அப்பியாளுக்கும்,    எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும்,    உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும் எழுதுகிறதாவது என்று பிலே.1:1,   2ல் எழுதினார். அர்க்கிப்பு பிலேமோனுடைய குமாரனாய் காணப்படலாம். பவுல் அவனைக் குறித்து  எங்கள் உடன் போர்ச்சேவகன்  என்று கூறுவதிலிருந்து,    பவுலோடு இணைந்து ஊழியம் செய்கிற ஒருவராய் அர்க்கிப்பு காணப்பட்டார் என்பதை அறியமுடிகிறது.  கொலோசே சபைக்கு எழுதின நிருபத்தின் வாயிலாக அர்க்கிப்பு  கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்ற கவனமாயிருக்கும் படிக்கு அவரை உற்சாகப்படுத்துகிறார். கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளப்பட்ட ஆசாரியக் கூட்டமாய் காணப்படுகிறீர்கள். இயேசுவின் சீஷர்களாய் நாம் காணப்படுகிறோம். ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் தாலந்துகளைக் கொடுத்திருக்கிறார். நீங்கள் புறப்பட்டுப்போய்,    சகல ஜாதிகளையும் சீஷராக்கி,    பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு  ஞானஸ்நானங்கொடுத்து,     நான் உங்களுக்குக்   கட்டளையிட்டயாவையும்  அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் என்பது இயேசுவின்  சீஷர்கள் ஒவ்வொருவருக்கும் அவர் கொடுத்த பெரிய கட்டளையாக (Great Commission) காணப்படுகிறது. ஆகையால் கர்த்தரிடத்திலிருந்து பெற்ற ஊழியத்தை நிறைவேற்ற நீங்கள் ஒவ்வொருவரும் கவனமாயிருக்கவேண்டும். 

அனேகர் கர்த்தர்  கொடுக்கிற ஊழியத்தை நிறைவேற்றாமலே இவ்வுலக வாழ்வை விட்டுக் கடந்து செல்லுவது உண்டு.  யூதாஸ் கூட கர்த்தர் கொடுத்த ஊழியத்தை நிறைவேற்றாமல் மரித்துப் போனான். உலக வேலைகளைக் கவனமாய் செய்கிறவர்கள் கூட கர்த்தருடைய காரியங்களை அசட்டை செய்வார்கள். அஜாக்கிரதையும்,    நிர்விசாரமும் கர்த்தருடைய வேலைகளைச் செய்கிறவர்களிடம் அதிகமாய் இந்நாட்களில் காணப்படுகிறது.  சத்துரு ஜனங்களை ஓய்வில்லாமல் உலகக் காரியங்களிலும்,    சமூக ஊடகங்களிலும் பரபரப்புடன் (busy) வைத்து வஞ்சிக்கிறவனாய் காணப்படுகிறான். கர்த்தருடைய பிள்ளைகளே,    நீங்கள் ஆண்டவரிடத்திலிருந்து பெற்ற ஒரு சிறிய ஊழியத்தைக் கூட கவனமாய் நிறைவேற்றுங்கள். நீங்கள் கொஞ்சத்தில் உண்மையாயிருக்கும் போது கர்த்தர் உங்களை அனேகத்தின் பேரில் அதிகாரியாய் வைப்பார்.  அனேகரைக்  கர்த்தர் பயன்படுத்தாதென் காரியம் அவர்களுடைய கரங்களில் கர்த்தர் கொடுத்த சிறிய ஊழியத்தைக் கவனமாய் நிறைவேற்றாமல் போனதின் நிமித்தமாய் காணப்படுகிறது. மேலும் ஊழியம் செய்கிறவர்களை  உற்சாகப்படுத்துங்கள். பவுல் மற்றவர்களை அதிகமாய் உற்சாகப்படுத்தின ஒரு நல்ல அப்போஸ்தலன். கர்த்தருடைய பணியைச் செய்கிற உங்கள் ஒவ்வொருவரையும் தொடர்ந்து அவர் பணியைச் செய்யும்படிக்கு ஆவியானவர் உற்சாகப்படுத்துகிறார்.  ஒருவன் எனக்கு ஊழியம் செய்வானேயாகில் பிதாவாகிய தேவன் கனம் பண்ணுவார் என்ற வார்த்தையின் படி,    கர்த்தரிடத்திலிருந்து  ஊழியத்தைப் பெற்று,    அதைக் கவனமாய் நிறைவேற்றக் கருத்தாய் காணப்படுகிற உங்கள் ஒவ்வொருவரையும் கனப்படுத்தி,    கர்த்தர் ஆசீர்வதித்து உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae