செய்யவேண்டிய வேலையோ பெரியது (The work to be done is great).

1 நாளா 29:1. பின்பு தாவீதுராஜா சபையார் எல்லாரையும் நோக்கி: தேவன் தெரிந்துகொண்ட என் குமாரனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனுஷனுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்குக் கட்டும் அரமனை.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/EEdnhVstbSs

ஆண்டவர் நமக்கு பெரிய இரட்சிப்பை கொடுத்திருக்கிறார். பெரிய ஜாதியாக்கிருக்கிறார். ஆகையால் நாம் கர்த்தருக்கென்று செய்யவேண்டிய வேலையும் பெரியதாய் இருக்கிறது. சாலொமோன் சொல்லுவார் எங்கள் தேவன் எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர்; ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும். நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ஆச்சரியப்படத்தக்கதுமாயிருக்கும் என்பதாக.

கர்த்தருக்காக பெரிய காரியங்களை செய்தவர்கள் அநேகம். தாவீது ஆடு மேய்த்துக்கொண்டிருந்தான்; அவனை ஜனங்களை ஆளும்படியாக கர்த்தர் அழைத்தார். பேதுரு மீன் பிடிக்கிறவன்; அவனை என்னை பின்பற்றிவா என்று சொல்லி அவனை மனிதர்களை பிடிக்கும்படி அழைத்தார். மத்தேயு வரி வசூலிப்பவன்; அவன் இயேசுவை சேவிக்கும்படி அழைத்தார். பவுல் கூடார தொழில் செய்து கொண்டிருந்தவன்; அவனை உலகமனைத்திற்கும் பயன்படுத்த வேண்டுமென்று அப்போஸ்தலனாக அழைத்தார். லூக்கா ஒரு மருத்துவன்; அவன் பவுலோடு ஊழியம் செய்ய கர்த்தர் அழைத்தார். உங்கள் தொழில் வேலை எதுவாக இருந்தாலும், நீங்கள் என்ன நிலைமையில் இருந்தாலும், இயேசு உங்களை அழைக்கிறார். யாரை அனுப்புவேன்? யார் நமது காரியமாக போவார்கள் என்று ஆண்டவர் கேட்கிறார். அவருக்காக செய்ய வேண்டிய வேலை பெரிதாய் இருக்கிறது. வயல் நிலங்கள் எல்லாம் ஆயத்தமாய் இருக்கிறது.

இந்த உலகில் மக்கள் தொகை பெருகி வருகிறது. இந்திய தேசத்திலும் மக்கள் தொகை அதிகமாகி உலகத்திலேயே அதிக மக்கள் தொகை உள்ள நாடாக மாறிவிட்டது. ஆத்துமாக்கள் நிறைந்த தேசமாக நம்முடைய தேசம் காணப்படுகிறது. மக்கள் தொகை பெருகும் வேளையில் சபையின் வளர்ச்சியும் பல மடங்கு பெறுக வேண்டும். ஆனால் இன்று சபையின் ஆவிக்குரிய வளர்ச்சி குறைந்துபோய்விட்டதோ என்ற கேள்விக்குறி அநேக முதிர்ச்சியடைந்த தேவ மனிதர்களின் கேள்வியாக உள்ளது. ஆகையால், நான் பெரிய மருத்துவராக வேண்டும், நான் பெரிய பொறியியலாராக வர வேண்டும், பெரிய ஆசிரியராக வர வேண்டும், பெரிய தலைமைத்துவ பணியில் அமர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அதே வேளையில், கிறிஸ்துவுக்காக பெரிய வேலையை செய்ய இயேசுவின் கண்கள் அநேகரை தேடி கொண்டிருக்கிறது.

சுவிசேஷப்பணியில் சபை தீவிரமாக வளர்ந்துகொண்டிருப்பதை தாங்கிக்கொள்ளாத பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டுள்ளான். அவனுடைய தந்திரங்களை அறிந்து உலகத்திற்கு வெளிச்சம் வீசுகிற ஒரு சேனை கர்த்தருக்காக எழும்ப வேண்டும். ஆண்டவருக்காக பக்தி வைராக்கியம் கொள்ளுகிற யெகூக்கள் எழும்ப வேண்டும். கர்த்தருடைய ஜனங்களோடு பாடுநுபவிக்க மோசேக்கள் எழும்ப வேண்டும். சுவிசேஷத்தை சுமந்து செல்லுகிற பவுல்கள் எழும்ப வேண்டும். இந்நாட்களில் எழுப்புதல் எங்கும் பற்றி எரிய ஜெபிக்கும் ஜெப வீரர்களின் தேவை பெரிதாய் இருக்கிறது. ஆண்டவருக்காக ஆத்துமாக்களை ஆயத்தம் செய்திட வாலிபர்களின் தேவையும் பெரிதாய் இருக்கிறது. சாலொமோனை போல கர்த்தருக்காக பெரிய வேலையை செய்ய உங்கள் தோல்களை கொடுங்கள், அப்பொழுது நித்தியத்துக்குரிய நன்மைகளினால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org