புத்தாண்டு தீர்க்கதரிசனங்கள் (New Year Prophecies):-

மத் 24:11. அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/On9xn1XtmNk

புத்தாண்டு என்றால் அநேக ஊழியக்காரர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். அவர்களில் சிலர் சரியாக ஆண்டவரிடம் பெற்றுக்கொண்ட தீர்க்கதரிசனங்களை உறைகிறார்கள். ஆனால் மேற்குறிப்பிட்ட வசனத்தில் அநேகம் கள்ளதீர்கதரிசிகள் என்று எழுதப்பட்டிருப்பதால் கொஞ்சம் உண்மையான தீர்க்கதரிசிகளை பார்க்கிலும் கள்ள தீர்க்கதரிசிகள் அதிகம் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. சில தொலைக்காட்சியில் 2024 ஆம் வருடத்தின் ஜோதிட பலன், ராசி பலன் போன்றவற்றை உரைப்பவர்களை போல இன்று அநேக கள்ள தீர்க்கதரிசிகள் எழும்பியிருப்பதை நாம் பார்க்கமுடிகிறது. ஆகையால் தேவ ஜனங்கள் வஞ்சிக்கப்படாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். பழைய ஏற்பாடு தீர்க்கதரிசிகள், புதிய ஏற்பாடு தீர்க்கதரிசிகள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். ஆனால் இன்றோ அறிவியல் வளர்ச்சியினிமித்தமும், செய்தித்தாளில் வாசிக்கிற கருத்து கணிப்பையும் சேர்த்து தீர்க்கதரிசனம் உறைகின்ற ஊழியக்காரர்கள் உண்டு.

சில தீர்க்கதரிசனங்கள் ஏதோ குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை ஆதரிப்பவைகளாகவும் இருக்கின்றன. கர்த்தருடைய ஜனங்கள் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் நம்முடைய கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறவர். அவர் இராஜாக்களை தள்ளி இராஜாக்களை ஏற்படுத்துகிறவர். யார் எந்த தேசத்தில் அதிபராக, பிரதமராக இருக்க வேண்டும் என்று கர்த்தருக்கு தெரியும். அவர் துவக்கத்தை முடிவிலிருந்தும், முடிவை துவக்கத்திலிருந்தும் பார்க்கிறவர். அடுத்த அதிபர் நேபுகாத்நேச்சாரக இருந்தாலும், தரியுவாகவா இருந்தாலும், யாராக இருந்தாலும், தானியேலின் காரியம் ஜெயமாகவே இருந்தது. அதுபோல கர்த்தருடைய ஜனங்களுடைய காரியமும் ஜெயமாகவே இருக்கும். ஏரோது வரலாம் போகலாம், பிலாத்து வரலாம் போகலாம், ஆனால் கர்த்தர் என்றென்றும் அரசாளுகிறவர். ஆகையால் யார் அதிபர் என்று கூறுகிற தீர்க்கதரிசனங்களை நம்பி ஏமார்ந்துபோய்விடாமல், உங்கள் காரியம் ஜெயமாய் இருக்க ஜெபியுங்கள்.

இப்படியிருக்க சில உண்மையான தீர்க்கதரிசனங்களும் உண்டு. கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார். சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்? (ஆமோஸ் 3:7,8) என்ற வார்த்தையின் படி உண்மையான தீர்க்கதரிசன்ங்கும் உண்டு. இப்படியிருக்க எது சரியான தீர்க்கதரிசனம் எது கள்ள தீர்க்கதரிசனம் என்று கண்டறியும் கிருபைகளை கர்த்தர் ஒவ்வொருவருக்கும் கொடுப்பராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar