பெட்டி(Ark):-

யாத் 25:10. சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/88nWBP3tR2A

கர்த்தர் மோசேயிடம் நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படி ஆசரிப்பு கூடாரத்தை கட்ட வேண்டும் என்று சொன்னார். அவற்றில் பிரகாரம், பரிசுத்த ஸ்தலம் மற்றும் மகா பரிசுத்த ஸ்தலம் இருந்தது. அவற்றிலிருந்த சமூகத்தப்ப மேஜை, பொன் குத்துவிளக்கு, தூப பீடம், வெண்கல தொட்டி, பலிபீடம் மற்றும் அநேக பாகங்கள் எப்படி பண்ண வேண்டும் என்று கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டார். இந்த ஆசரிப்பு கூடாரத்தில் இருந்த சிறிய பாகம் தான் உடன்படிக்கை பெட்டி. மனிதர்களாகிய நம்முடைய எண்ணங்கள் முதலில் கூடாரத்தின் அளவு எப்படி இருக்க வேண்டும், அதை வைப்பதற்கு எவ்வளவு இடம் தேவை இப்படி தான் முதலில் யோசிப்போம். ஆனால் கர்த்தர் முதலாவது அளவில் சிறியதான பெட்டி எவ்வளவு அளவில் செய்யவேண்டும் என்று பெட்டியிலிருந்து அவர் துவங்குகிறார். பெட்டி மிகவும் சிறிய அளவுள்ளது, அவை வைக்கப்பட்டிருந்த இடம் மகா பரிசுத்த ஸ்தலம். ஆனால் அந்த இடம் தான் கர்த்தரின் மகிமை அளவில்லாமல் இறங்கிய இடம். அதுவே அவருடைய முதல் வாஞ்சையாய் இருந்தது.

நாம் ஒருவேளை வீடு கட்ட வேண்டும் என்று முயற்சிக்கும்போது, முதலாவது நினைப்பது எவ்வளவு பெரிய வீடு கட்ட வேண்டும், அதற்கு எத்தனை சென்ட் இடம் வேண்டும், எத்தனை மாடி கட்ட வேண்டும், எத்தனை அறைகள் வைக்க வேண்டுமென்றெல்லாம் சொல்லி ஒரு மாதிரி வரைபடத்தை வரைந்து அரசாங்கங்களின் அனுமதிக்காக அனுப்பிவைப்பதுண்டு. எத்தனை பேர் முதலில் வீடு கட்டுவதற்கு முன், கர்த்தரின் நாமத்தை இந்த வீட்டின் மூலம் நான் எப்படி மகிமைப்படுத்த போகிறேன்? அவருடைய மகிமை எப்பொழுதும் இங்கே தங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று சிந்தித்து கர்த்தருக்கு நீங்கள் முதலுரிமை கொடுத்திருக்கிறீர்களா? புறஜாதி மக்கள் கூட சிறிய வீடு என்றால் அந்த வீட்டிற்குள் அவர்கள் வணங்கும் காரியங்களுக்கு ஒரு அறையை கட்டவேண்டும் என்று எண்ணி வீடு கட்டுகிறார்கள். பெரிய வீடென்றால், வெளியில் இருக்கும் இடத்தில ஒரு சிறிய கோவிலையே கட்டிவிடுகிறார்கள். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒரு வீடு கட்டும்போது, எத்தனை பிரதான படுக்கை அறை, எவ்வளவு பெரிய முற்றம், எவ்வளவு பெரிய மண்டபம் என்றெல்லாம் யோசிப்பதற்கு முன்பு, வீட்டில் நான் எப்பொழுதும் ஆண்டவரோடு தனித்திருக்க ஒரு ஜெப அறையை உண்டாக்க வேண்டும், அந்த ஜெப அறையில் வெறும் ஜெபமும், வேத வாசிப்பும் மாத்திரம் தான் காணப்பட வேண்டும், முதலில் ஆண்டவர் எப்பொழுதும் உலாவதக்கதான இடம் உண்டாக்கவேண்டுமென்ற எண்ணம் காணப்படாமல் இருப்பது சற்று சிந்திக்கக்கூடிய காரியமாக காணப்படுகிறது.

ஆசரிப்பு கூடாரத்தில் இருந்தவை எல்லாம் முக்கியமானவைகள் தான். ஆனால் கர்த்தர் முதலாவது செய்ய சொன்னது பெட்டி; காரணம் அங்கே தான் அவருடைய மகிமை காணப்பட்டது. அப்படித்தான் உங்கள் வீட்டில் இருக்கும் எல்லாம் முக்கியமானவை தான்; ஆனால் அவற்றில் கர்த்தருக்கு நீங்கள் கொடுக்கும் தனி இடம் அதிக முக்கியம். கருத்தில்கொண்டு ஜெப அறைகளை உங்கள் வீட்டில் கட்டி, ஜெபங்களை ஏறெடுங்கள். உங்கள் வாழ்க்கையில் எழுப்புதலும் ஆசிர்வாதமும் நிச்சயம்!.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org