நீங்கள் செழிப்பீர்கள் (You will be prospered).

நீதி 28:25. பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8Qbv9YqxRAY

கர்த்தரை நம்பிக்கையாய் கொண்டவர்கள் பாக்கியவான்கள். கர்த்தரை நம்புகிறவர்களை கிருபை சூழ்ந்துகொள்ளும். சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. கர்த்தரை நம்பியவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை. அதுபோல, கர்த்தரை நம்புகிறவர்கள் செழிப்பார்கள். சோதோமின் ராஜா ஆபிரகாமிடம் அதிக பொருட்களை காணிக்கையாக கொடுத்தான். அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று, வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன் என்று சொல்லி கர்த்தரை தன் நம்பிக்கையாக கொண்டான். எலிசாவிடம் நாகமான் அநேக வெகுமதிகளோடு வந்தான். எலிசா அவைகளில் ஒன்றையும் வாங்கவில்லை. காரணம் இவர்களெல்லாம் கர்த்தரையே நம்பி ஜீவித்தவர்கள். ஆகையால் பஞ்சம் வந்தபோது கர்த்தர் அவர்களை போஷித்தார், ஐஸ்வரியமாய் வைத்தார். அதுபோல நீங்களும் எல்லாவற்றிலும் கர்த்தரை நம்புவீர்களென்றால், நீங்கள் செழிப்பீர்கள். எண்ணுவதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாய் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

ஒரு ஊழியக்காரர் தன்னுடைய ஊழியத்தின் ஆரம்ப காலத்தில் அதிக பற்றாக்குறையுடன் இருந்தார். தேவைகள் அதிகம் இருந்தபோதும் ஒருபோதும் மனிதர்களை நம்பி ஜீவிக்காமல், கர்த்தரையே நம்பி ஜீவித்தார். இருந்த வேலையையும் விட்டு தேவனுக்கு ஊழியம் செய்ய தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். தன்னுடைய வறுமையிலும் பணத்திற்காக ஊழியம் செய்யாமல், உண்மையுடனும் நேர்மையுடனும் கர்த்தருக்கு பணிசெய்தார். இன்று அவருடைய குமாரர்கள் பெரிய பெரிய துறைகளில் பெரிய பொறுப்பில் இருக்கிறார்கள். அவரின் ஒரு குமாரன் உலகின் பெரிய தொழில் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) இருக்கிறார். அந்த ஊழியக்காரரின் வாழ்க்கையில் மாத்திரமல்ல அவருடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையிலும் கர்த்தர் செழிப்பை கொடுத்தார்.

இயேசு சமாரியா ஸ்திரீயை பார்த்து சொன்னார் நான் சொல்லுகிறதை நம்பு என்பதாக (யோவா 4:21). இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார், நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள் (யோவா 14:11) என்பதாக. ஆபிரகாம் தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான் (ரோம 4:18).

காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?(ரோம 8:24) என்று வசனம் சொல்லுகிறது. ஆகையால் காணாத செழிப்பை கர்த்தர் உங்களுக்கு கொடுப்பார் என்று நம்புங்கள். நீங்கள் காண்கிற, உங்களிடம் இருக்கிற ஐந்து அப்பம், இரண்டு மீன்களை பார்க்கிலும், நீங்கள் காணாத கூடைகளை, செழிப்பை நம்புங்கள். கர்த்தர் உங்கள் எல்லையை விரிவாக்குவார் என்று நம்புங்கள். தாவீது நாளுக்கு நாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் கர்த்தர் அவனோடிருந்தார். நீங்களும் நாளுக்கு நாள் விருத்தியடைவீர்கள் என்று நம்புங்கள். கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார் என்று நம்புங்கள். எலியாவை காகங்களை கொண்டு போஷித்தவர். உங்களையும் போஷிப்பார் என்று நம்புங்கள். யோபுவை போல, சாலொமோனை போல கர்த்தர் உங்களை செழிப்புடன் நடத்துவார் என்று நம்புங்கள். அப்படி கர்த்தரையும் அவருடைய வார்த்தையையும் நம்புவீர்களென்றால், நீங்கள் செழிப்பீர்கள். நீங்கள் காணாத செல்வம், நீங்கள் காணாத ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்றுகொள்ளுவீர்கள். உங்கள் பிள்ளைகள் கொழுத்த கன்றுகளை போல இருப்பார்கள். கர்த்தரை நம்புங்கள்; அப்பொழுது நீங்கள் செழிப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org