கர்த்தருக்கு பிரியமானவனின் ஜெபம் (The prayer of greatly beloved man).

நீ மிகவும் பிரியமானவன்,    ஆதலால்,    நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது,    நான் அதை அறிவிக்கவந்தேன், இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு,    தரிசனத்தை அறிந்துகொள்(தானி. 9:23).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/n1nKm9N2zzA

தானியேல் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்ட போது,    உபவாசம் பண்ணி,    இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து,    தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும்  விண்ணப்பங்களினாலும் தேட முகத்தை அவருக்கு நேராக்கி,    இருபத்து ஒன்று நாட்கள் கர்த்தரை நோக்கி ஜெபம் பண்ணினான். அவன் கர்த்தருக்குப் பிரியமானவனாய் காணப்பட்டதினால் கர்த்தர் அவனுடைய ஜெபத்தைக் கேட்டு பதில் கொடுத்தார். அவன் இருபத்து ஒன்று நாட்கள் உபவாசம் பண்ணினதின் நிமித்தமல்ல,    அவன்  கர்த்தருக்குப் பிரியமானவனும் உண்மையுள்ளவனுமாய் காணப்பட்டதினாலே கர்த்தர் அவனுக்குப் பதில் கொடுத்தார். இந்நாட்களிலும் மூன்று நாட்கள்,   இருபத்து ஒன்று நாட்கள்,    நாற்பது நாட்கள் என்று உபவாசமும் ஜெபங்களும் நடக்கிறது. தேர்தல் காலங்களில் இவற்றை அனேகம் பார்க்கமுடியும்,    இதைப்பற்றிய அனேக விளம்பரங்களும் வருகிறது. இப்படி அனேக நாட்கள் உபவாசம் பண்ணி ஜெபிப்பது நல்லதுதான்,    இயேசுவும் இவ்வகையான பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெந்தவிதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்று கூறினார். இது எவ்விதத்திலும்  ஜெபதியானத்தை  குறையப்பண்ணுவதற்காய் அல்ல,    மாறாகக் கர்த்தருக்குப் பிரியமில்லாத ஜீவியம் செய்து,    அவருடைய காரியங்களில் உண்மையில்லாமல் காணப்பட்டு,    சுகபோக ஜீவியங்களை விரும்பி,    தங்களைப் பிரபலப்படுத்தி,    மாய்மாலங்களினாலும்  தந்திரங்களினாலும் ஜனங்களை வஞ்சிக்கிறவர்களுடைய  ஜெபங்கள் கர்த்தருடைய  சமூகத்தைச்  சென்றடைவதில்லை. செம்மையானவர்களுடைய ஜெபம் கர்த்தருக்குப் பிரியம்,    ஆனால் துன்மார்க்கனுடைய ஜெபம் அவருக்கு அருவருப்பு. 

கர்த்தருடைய பிள்ளைகளே,    கர்த்தருக்குப் பிரியமான ஜீவியம் செய்யுங்கள். மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்,    உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள். கொர்நேலியு தேவபக்தியுள்ளவனும் தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து,    ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து,    எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான்,    அவனுடைய ஜெபம்  தேவசமூகத்தை எட்டி உடனடியாக பதிலைக் கொண்டு வந்தது. தாவீதை என் இருதயத்திற்கு ஏற்றவனாகக் கண்டேன்,    எனக்குச் சித்தமானவற்றையெல்லாம் அவன் செய்வான் என்று கர்த்தர் சாட்சி கொடுத்தார். நாத்தான் வேலைக் குறித்து கபடமற்ற உத்தம இஸ்ரவேலன் என்று கூறினார். மோசே கர்த்தருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாய் காணப்பட்டான். ஆபிரகாம் தேவனுடைய  சினேகிதன்  என்னபட்டான். பவுலை உண்மையுள்ளவனென்று கருதி கனமான ஊழியத்தைக் கர்த்தர் கொடுத்தார். இப்படிப்பட்ட பரிசுத்தவான்களைப் போல உண்மையும் உத்தமும்  உங்களைக்  காரியங்களில் காணட்டும்,    இருதயமாகிய  பலிபீடங்களைச்  செப்பனிடுங்கள். நீங்கள் கர்த்தருக்குப் பிரியமானவர்களாய் காணப்படும் போது,    அவர் உங்கள் விண்ணப்பங்களின் சத்தங்களைக் கேட்டு உடனடியாக பதில் தருவார். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae